ஹெச்.ராஜா உடல் நலம் பெறணும்.. பழனி முருகன் கோயிலுக்கு காவடி எடுத்த அண்ணாமலை
சென்னை: பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் உடல் நலம் தேறி பூரண குணமடைய வேண்டி பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை காவடி எடுத்து வேண்டுதல் செய்தார்.
ஹெச். ராஜா விரைவில் உடல் நலம் திரும்பி பாஜகவிற்கு தனது முழு உழைப்பை கொடுப்பார் என்ற என்ற பெரிய வேண்டுதலை முருக பெருமானிடம் வைத்து இருக்கிறோம், 100 சதவீதம் உடல் நலம் தேறி வருவார் என்ற நம்பிக்கை உள்ளது என அண்ணாமலை கூறினார்.

அப்பல்லோ மருத்துவமனையில் ஹெச் ராஜா
தமிழக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான ஹெச். ராஜா உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை கிண்டியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சில் ஒன்றில் கலந்து கொண்ட போது திடீரென மயங்கி விழுந்த ஹெச். ராஜா உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு பக்கவாதம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தொடர் சிகிச்சையால் அவர் உடல் நலம் தேறி வருவதாகவும், பேசக்கூடிய நிலையில் உள்ளார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. ஹெச்.ராஜா தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும்நிலையில் அவர் உடல் நலம் தேற வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் பலரும் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.
காவடி எடுத்த அண்ணாமலை
முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று ஹெச். ராஜா உடல் நலம் குறித்து அவரது மகள்களிடம் கேட்டறிந்தார். அப்பல்லோ மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் ஹெச். ராஜா உடல் பெற வேண்டும் என வேண்டி தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பழனி முருகன் கோயிலில் நேற்று காவடி எடுத்து வழிபாடு நடத்தினார்.
தைப்பூச நாளான நேற்று அண்ணாமலை இந்த வழிபாடு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை கூறியதாவது:- தைப்பூச தினத்தன்று தமிழ்கடவுளான முருக பெருமானை தரிசிக்க கடந்த ஆண்டு வாய்ப்பு கிடைத்தது. அதேபோல இந்த ஆண்டும் முருக பெருமான் வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். காவடி எடுத்து வந்து மேலே சென்று வழிபாடு நடத்திவிட்டு வந்து இருக்கிறேன்.
100 சதவீதம் உடல் நலம் தேறி வருவார்
தைப்பூசத்தை பொறுத்தவரை தமிழ் இனத்திற்கு மிகவும் நெருக்கமான திருவிழா. இந்த ஆண்டு எல்லாருக்கும் பிரார்த்தனை செய்து இருக்கிறேன். வருகின்ற ஆண்டு சிறப்பாக இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்து இருக்கிறொம். தனிப்பட்ட முறையில் ஒரு வேண்டுகோளை வைத்து இருக்கிறேன். ஹெச். ராஜா முழுமையாக உடல்நலம் தேறி வர வேண்டும் என்ற வேண்டுதலோடு படியேறியிருக்கிறேன்.
பாஜக மூத்த தலைவர் தர்ம போராளி. கட்சிக்காக நிறைய இழந்து இருக்கிறார். கட்சிக்காக நிறைய பாடுபட்டு இருக்கிறார். அதனால் ஹெச். ராஜா விரைவில் உடல் நலம் திரும்பி பாஜகவிற்கு தனது முழு உழைப்பை கொடுப்பார் என்ற என்ற பெரிய வேண்டுதலை முருக பெருமானிடம் வைத்து இருக்கிறொம். 100 சதவீதம் உடல் நலம் தேறி வருவார் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications