8 ஆம் வகுப்பு மாணவியை சிதைத்த ஆசிரியர்கள்.. “திமுக அரசு மொத்தமா தோத்துப்போச்சு”.. அண்ணாமலை அட்டாக்!
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, அந்தப் பள்ளியின் ஆசிரியர்களாலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்வை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வேதனை தெரிவித்துள்ளார். பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார் அண்ணாமலை.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவி கடந்த ஒரு மாதமாக பள்ளிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவியின் வீட்டுக்கு சென்று, அந்த மாணவி ஏன் பள்ளிக்கு வரவில்லை எனக் கேட்டு அறிந்துள்ளார். அப்போது மாணவியின் பெற்றோர் சொன்ன விஷயத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.

அந்த எட்டாம் மாணவி கர்ப்பம் அடைந்து கரு கலைப்பு செய்திருப்பதாக பெற்றோர் தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பள்ளியின் தலைமை ஆசிரியர், உடனடியாக மகளிர் காவல்துறையில் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் மாணவியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.
அதே பள்ளியில் படிக்கும் மூன்று ஆசிரியர்கள் மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும், அதன் காரணமாகவே மாணவி கர்ப்பம் அடைந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. இந்தச் சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக போலீசார் இந்த சம்பவத்தில் வழக்கு பதிவு செய்து மூன்று ஆசிரியர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் கைது செய்யப்பட்ட மூன்று ஆசிரியர்களிடமும் டிஎன்ஏ பரிசோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவத்தில் குற்றவாளிகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளியில் என்சிசி பயிற்சி முகாமில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பில் ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் அதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆசிரியர்களே மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது, ஒரு சமூகமாக, நாம் மிகப் பெருமளவில் தோல்வியடைந்திருக்கிறோம் என்பதையே காட்டுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
அண்ண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், "கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில், 13 வயது அரசுப் பள்ளிச் சிறுமி, பள்ளி ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஆசிரியர்களே மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது, ஒரு சமூகமாக, நாம் மிகப் பெருமளவில் தோல்வியடைந்திருக்கிறோம் என்பதையே காட்டுகிறது. இது மிகவும் வருத்தத்திற்குரியது.
இளம்சிறுமிகள் கர்ப்பம் தரிப்பது, தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருவதாக, தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும், 13 - 19 வயதுக்குட்பட்ட 14,360 குழந்தைகள், கர்ப்பம் தரித்துள்ளனர். இது, 2023 ஆம் ஆண்டை விட, சுமார் 35% அதிகம். பள்ளிக் குழந்தைகளுக்குப் போதுமான விழிப்புணர்வு இல்லை. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய குழந்தைகள் நல வாரியம், குறைந்தது 10 மாவட்டங்களில் முற்றிலுமாகச் செயல்படவில்லை. 15 மாவட்டங்களில், போதுமான உறுப்பினர்கள் இல்லை.
பெண் குழந்தைகள் நலனுக்காகவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், மத்திய அரசின் கிஷோரி சக்தி யோஜனா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் உள்ளன. ஆனால், இவை எதையும், தமிழகப் பள்ளிகளில் செயல்படுத்தியதாகத் தெரியவில்லை. ஒரு புறம் பெருகி வரும் பாலியல் குற்றங்கள், போதைப் பொருள் புழக்கம், மற்றொரு புறம், அவற்றைக் கட்டுப்படுத்தும் அரசு அமைப்புகளைச் செயல்படாதவண்ணம் முடக்கி வைப்பது என, நமது குழந்தைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் திமுக அரசு முற்றிலுமாகத் தோல்வியடைந்திருக்கிறது.
இந்தக் குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாகப் பணி நீக்கம் செய்ய துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதோடு, கடுமையான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்றும், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், குழந்தைகள் நல வாரியத்துக்கான உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்றும், பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications