கரணம் தப்பினால் மரணம்; போலீஸ்காரர்களுக்கு முதலில் இதை செய்யுங்க; அரசுக்கு அண்ணாமலை யோசனை!
சென்னை: கரணம் தப்பினால் மரணம் என்ற ஆபத்தான சூழலில் தான் காவல்துறையினர் பணியாற்றி வருவதாக முன்னாள் ஐ.பி.எஸ்.அதிகாரியும், பாஜக தலைவருமான அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.
ஆடு திருடர்களால் கொலை செய்யப்பட்ட திருச்சி நவல்பட்டு எஸ்.ஐ. குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறியிருக்கிறார்.
மேலும், பணி நேரத்தில் கொலை செய்யப்படும் காவலர்களின் குடும்ப நலனுக்காக சிறப்பு சட்டம் ஒன்றை கொண்டு வர வேண்டும் என தமிழக அரசை அவர் வலியுறுத்தி கேட்டுள்ளார்.

எஸ்.ஐ. கொலை
ஆடு திருடர்களால் திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை செய்யப்பட்டுள்ள நிகழ்வு தமிழகம் தழுவிய அளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பணியில் இருக்கும் எஸ்.ஐ. ஒருவரேயே சமூக விரோதிகள் கொலை செய்திருப்பதால் இந்த விவகாரம் சட்டம் ஒழுங்கு விவகாரத்துடன் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. இதனால் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் அரசுக்கு உருவாகியுள்ளது.

அண்ணாமலை இரங்கல்
இந்நிலையில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும், பாஜக தலைவருமான அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், ''திருச்சி மாவட்டம் நவல்பட்டு சப் இன்ஸ்பெக்டர் கயவர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார் என்கிற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலைப்பாட்டில் தான் நம்முடைய காவல்துறை சகோதர சகோதரிகள் பணியாற்றுகிறார்கள்.''

சிறப்பு சட்டம்
''பணி நேரத்தில் கொலை செய்யப்படுபவர்களுக்கு சிறப்பு சட்டம் என்று எதுவும் கிடையாது, இது போன்ற நிகழ்வுகள் அந்த சிறப்பு சட்டம் வேகமாக வரவேண்டும் என்று நமக்கு நினைவூட்டுகிறது. மாநில அரசு இது போன்ற நிகழ்வுகளுக்காக ஒரு கோடி ரூபாய் நிவாரணத் தொகையை அறிவித்து அதை செயல்படுத்த வேண்டும். கொலை செய்யப்பட்ட எஸ்.ஐ. பூமிநாதன் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்'' என அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.

போலீஸ்காரர்
ஏற்கனவே போலீஸ் அதிகாரியாக பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில் சிறப்பு சட்டம் தொடர்பான இந்தக் கோரிக்கையை அரசுக்கு முன் வைத்திருக்கிறார் அண்ணாமலை. இவர் கோருவது போல், பணியின் போது கொல்லப்படும் காவலர்களின் குடும்ப நலன் கருதி ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கும் வகையில் சிறப்பு சட்டம் இயற்றினால், இன்னும் வீரதீரமாக காவலர்கள் கவலையின்றி சமூக விரோதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளில் முனைப்பு காட்டுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications