நாள் குறிச்சாச்சு... போன்போட்டு விவாதத்துக்கு அழைத்த விசிக நிர்வாகி - 26 ஆம் தேதி வரசொன்ன அண்ணாமலை
சென்னை: அம்பேத்கர் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சங்கத்தமிழனுடன் 26 ஆம் தேதி விவாதம் செய்ய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சம்மதம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
மோடியை இளையராஜா பாராட்டியதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ட்விட்டரில் இளையராஜாவுக்கு எதிராக ஹேஷ்டேக்குகளும் டிரெண்டாகின.
திமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் கூட்டணி கட்சியினர், சினிமா பிரபலங்கள் போன்றோர் இளையராஜாவின் கருத்துக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர். மறுபக்கம் பாஜகவினர் இளையராஜாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இளையராஜா கருத்து
புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் நிறுவனம் "மோடியும் அம்பேத்கரும்" என்ற பெயர் கொண்ட புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறது. இந்த புத்தகத்திற்கு இளையராஜா முன்னுரை எழுதி இருந்தார். அதில், "அம்பேத்கரை தெரிந்துகொள்வதை போல அவரது கருத்தை அமல்படுத்துபவர்களை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். முத்தலாக்கிற்கு எதிரான சட்டத்தின் மூலமாகவும் பெண்கள் வாழ்வில் மாற்றத்தை பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார். இதனை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார்.

அம்பேத்கர் - மோடி ஒப்பீடு
அம்பேத்கரும், மோடியும் ஏழ்மையையும் ஒடுக்குமுறையையும் அனுபவித்தவர்கள். அதை ஒழிக்க பாடுபட்டவர்கள். இருவருமே இந்தியாவின் மீது பெரிய கனவுகளை கண்டதுடன் செயல்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்டனர். இப்படி இருவரும் ஒன்றுபடுவதை இந்த புத்தகம் எடுத்துக்காட்டி இருக்கிறது. பிரதமர் மோடியால் கட்டமைக்கப்பட்டு வரும் தற்சார்பு இந்தியா என்பது விடுதலை போராட்ட தியாகிகளுக்கு செலுத்தும் சரியான அஞ்சலி." என குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை விட்ட சவால்
இந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி கமலாலயத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அண்ணாமலை, "பிரதமர் மோடியை இளையராஜா அம்பேத்கருடன் ஒப்பட்டதில் என்ன தவறு உள்ளது? அம்பேத்கர் ஆர்.எஸ்.எஸ். குறித்து தெரிவித்த கருத்து குறித்து நேருக்கு நேராக திருமாவளவன் விவாதம் நடத்த தயாரா?" என கேள்வி எழுப்பினார்.

திருமாவளவன் பதிலடி
இதுகுறித்து, புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த திருமாவளவன், "விளையாட்டுப் போட்டிகளில் கூட படிநிலை என்ற ஒன்று உள்ளது. அதை ஜூனியர், சப் ஜூனியர் என்று அழைப்பார்கள், அண்ணாமலை ஒரு சப்-ஜூனியர். அவரோடு விவாதிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து ஒரு சப் ஜூனியரை அனுப்பி வைக்கிறேன்.

அண்ணாமலைக்கு போன் போட்ட சங்கத்தமிழன்
இந்த நிலையில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சங்கத்தமிழன் நேர்காணல் கொடுத்துக் கொண்டிருந்தபோது, பாஜக தலைவர் அண்ணாமலையை அவர் செல்போனில் தொடர்புகொண்டார். போனை எடுத்து அண்ணாமலையிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், விவாதத்திற்கு அழைத்தார். அதற்கு பதிலளித்த அண்ணாமலை, "அமித்ஷா வருவதால் 2 நாட்கள் ஊரில் இருக்க மாட்டேன். 26 ஆம் தேதி சந்திக்கலாம்" என்றார்.

புத்தகத்தை படிச்சுட்டு வாங்க
உடனே சங்கத்தமிழன் "நீங்கள்தான் எங்கள் தலைவரை தேவையில்லாமல் வம்புக்கு இழுக்கின்றீர்கள். விவாதத்துக்கு தயார் எனக் சொல்கிறீர்கள்." என்றார். 26 ஆம் தேதி வாங்க நிச்சயம் விவாதம் பன்னலாம் என்று சொன்ன அண்ணாமலை, 25 ஆம் தேதி என்னை தொடர்புகொண்டு உறுதிபடுத்திக்கொள்ளுங்கள் என்று தெரிவித்தார். அதற்கு "புரட்சியாளர் அம்பேத்கருடைய தொகுப்பு எண் 8 என்ற புத்தகத்தை வாய்ப்பிருந்தால் படித்து விட்ட வாருங்கள்" என்று சங்கத்தமிழன் சொல்ல, நான் படிச்சிருக்கேன் அண்ணா, இந்துத்துவா அம்பேத்கர் என்ற புத்தகத்தை நானும் வைத்திருக்கிறேன் என்று அண்ணாமலை பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications