ஒரு வார்த்தை சொன்ன டிகே சிவகுமார்.. டக்கென பாய்ந்து வந்து காட்டமாக பதிலடி கொடுத்த அண்ணாமலை!
சென்னை: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை சீண்டி இருந்த நிலையில், அவருக்கு எக்ஸ் தளத்தில் பதிலடி கொடுத்துள்ளார் அண்ணாமலை.
மத்திய பாஜக அரசு நாடு முழுவதும் தொகுதி மறுவரையறை செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், அதனை மக்கள் தொகை அடிப்படையில் செய்யக்கூடாது என முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அதிமுக, பாமக, தேமுதிக, காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் இந்த பிரச்சனையில் தமிழக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், மத்திய அரசின் தொகுதி மறுவரையறையில் தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட ஒட்டுமொத்த தென் மாநிலங்களுமே பாதிக்கப்படும். இதனால் ஏற்படப்போகும் சிக்கல்கள் குறித்து ஆராய்வதற்கும், மத்திய அரசின் தொகுதி மறுவரையறையை ஒத்தி வைக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு இன்று சென்னையில் தென்மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சி பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து கூட்டம் ஒன்றை நடத்தியது.
இதில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், கர்நாடக துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை சீண்டி இருந்தார். மேகதாதுவில் கர்நாடக நிச்சயம் அணை கட்டும் என அம்மாநில துணை முதலமைச்சரான டிகே சிவக்குமார் தொடர்ச்சியாக கூறி வருகிறார். அதற்கு தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் கர்நாடகா மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார். இதற்கு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சட்டப்படியாகவும், அரசியல் தளத்திலும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் தமிழ்நாட்டுக்கு பாதகத்தை ஏற்படுத்தும் மேகதாது அணை கட்டுவோம் என கூறும் டிகே சிவக்குமார் தமிழ்நாடு வந்தால் நிச்சயம் தமிழ்நாடு பாஜக கருப்புக்கொடி போராட்டம் நடத்தும் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். அதன்படி, இன்று தமிழ்நாடு பாஜக கருப்புக்கொடி போராட்டம் நடத்தியது.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் டிகே சிவக்குமாரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "பாஜக நடத்தும் கருப்புக்கொடி போராட்டத்தை வரவேற்கிறேன். என்னை அவர்கள் திகார் சிறையில் அடைத்தபோதுகூட பயப்படாதவன், அவர்கள் நடத்தும் இந்த கருப்புக்கொடி போராட்டத்துக்கா நான் பயப்படப்போகிறேன். அண்ணாமலையை எங்களுக்கு நன்றாக தெரியும். எங்கள் கர்நாடகாவில் தான் அவர் பணியாற்றினார். எங்களுடைய பலம் என்ன என்று அவருக்கும் தெரியும். அதனால் அவருக்கு வாழ்த்துகள்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அண்ணாமலை எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஆம், நான் ஒரு காவல்துறை அதிகாரியாக கர்நாடக மக்களுக்கு விடாமுயற்சியுடன் சேவை செய்தேன். அதனை நினைவுகூர்ந்து குறிப்பிட்டதற்கு நன்றி. இந்த எளிய மனிதனை வாழ்த்தியதற்கு நன்றி. மேலும், சித்தராமையாவை அவரது நாற்காலியில் இருந்து வீழ்த்தி கர்நாடக முதல்வராகும் உங்கள் அயராத முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகள்!" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications