இளம் தலைவர் பக்கம் வீசும் காற்று.. தமிழக பாஜகவில் நடக்கப்போகும் மாற்றம்.. தேசிய தலைமை கணக்கு என்ன?
சென்னை: தமிழக பாஜக தலைமையில் மாற்றம் கொண்டு வர டெல்லி தலைமை ஆலோசித்து வருவதாக தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அகற்றப்பட்டுள்ள சூழலில், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை எதிர்க்கக் கூடிய இளம் தலைவரை பாஜக நியமிக்க காய் நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது.
2024 லோக்சபா தேர்தலில் தனி அணி அமைத்து போட்டியிட்ட பாஜகவுக்கு சுமார் 18% வாக்குகள் கிடைத்தன. ஆனால் இம்முறை அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட பாஜகவின் வாக்கு சதவிகிதம் 2.97% ஆக குறைந்திருக்கிறது. அதேபோல் கடந்த முறை பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றிருந்த சூழலில், இம்முறை ஒரேயொரு இடத்தில் மட்டுமே வென்றிருக்கிறது.

தமிழக பாஜகவின் முன்னணி தலைவர்களான நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தரராஜன், வானதி ஸ்ரீனிவாசன், எல்.முருகன் உள்ளிட்ட பலரும் தோல்வி அடைந்திருக்கின்றனர். தமிழ்நாட்டில் பாஜக அடைந்த தோல்வி, டெல்லி தலைமையை பெரிதாக அசைத்து பார்க்கவில்லை. ஏனென்றால் பாஜக புதிதாக மேற்கு வங்கத்தில் ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது.
இதனால் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலரும் உற்சாகம் அடைந்துள்ளனர். இதனால் தமிழக பாஜக பக்கம் யாரும் கவனத்தை திருப்பவில்லை. ஆனால் பாஜக தேசிய தலைவர் நதின் நபின் தமிழ்நாட்டின் மீது ஒரு கண் வைத்துள்ளார். அதற்கு தமிழ்நாட்டில் மாறி வரும் அரசியல் சூழல் மிகமுக்கியமான காரணம். மாற்றம் வேண்டும் என்று இளைஞர்கள் பலரும் பாரம்பரிய கட்சிகளை புறக்கணித்துள்ளனர்.
டெல்லியிலும் இப்படிதான் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தார் அரவிந்த் கெஜ்ரிவால். அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியின் போது டெல்லியில் பாஜக வேகமாக வளர்ந்தது. விரைவாக எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு வந்த பாஜக, தற்போது ஆட்சியில் இருக்கிறது. இந்த பாணியை தமிழ்நாட்டிலும் செயல்படுத்த பாஜக தலைமை ஆர்வமாக இருக்கிறது.
அதற்காக துடிப்பான இளம் தலைமையை தமிழக பாஜகவுக்கு கொண்டு வர அக்கட்சியின் தலைமை வர தயாராகிவிட்டது. ஏற்கனவே அண்ணாமலை கடந்த சில ஆண்டுகளாக ஆக்ரோஷமாக திமுகவை எதிர்த்து அரசியல் செய்தார். ஆனால் அதிமுகவுடன் அண்ணாமலை மோதல் போக்கில் ஈடுபட்டதால், அந்த இடத்திற்கு நயினார் நாகேந்திரன் கொண்டு வரப்பட்டார்.
ஆனால் நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக தோல்வி சந்தித்திருப்பதால், பாஜக அடுத்த மாற்றத்தை மேற்கொள்கிறது. இம்முறை மீண்டும் மான்செஸ்டர் நகரில் இருக்கும் இளம் தலைவர் பக்கமே காற்று வீசுவதாக அக்கட்சியினர் பேசத் தொடங்கியுள்ளனர். அவரும் அவரின் ஆதரவாளர்கள் மத்தியில் பதவி மீண்டும் வரும் என்று வார்த்தைகளை கூறி இருக்கிறார்.
இதன் மூலமாக அரசியல்மயப்படுத்தப்படாத இளம் வாக்காளர்களை பாஜக பக்கம் இழுக்க முடியும் என்று அக்கட்சி தலைமை நம்புகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக பாஜகவில் மேல் மட்டத்தில் இருந்து அடி வரை மிகப்பெரிய மாற்றத்தை செய்யவும் தயாராகி வருகிறது. அதற்கான பணிகள் இன்னும் சில வாரங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications