கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்! தமிழக ஆளுநரை சந்தித்த அண்ணாமலை, தமிழிசை!
சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தை தொடர்ந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்டோர் சந்தித்து மனு கொடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழிசை சவுந்திரராஜன், நாராயணன் திருப்பதி உள்ளிட்ட 9 பேர் ராஜ்பவனுக்குள் சென்றுள்ளனர்.

அங்கு ஆளுநரை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். இந்த கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஆளுநரை சந்திக்க போவதாக ஏற்கெனவே அண்ணாமலை கூறியிருந்த நிலையில் இன்றைய தினம் ஆளுநரை சந்தித்தார். கள்ளச்சாராய வழக்கில் திமுகவை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 100 -க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உடல்நிலைக்கேற்ப அவர்கள் விழுப்புரம், சேலம், புதுவை ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
கண் எரிச்சல், கண் பார்வை மங்குதல், மயக்கம், வயிற்று வலி, வயிற்று போக்கு, வாந்தி உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்ட 58 பேர் பலியாகிவிட்டனர். மீதமுள்ளவர்கள் சிகிச்சை பெறுகிறார்கள். இவர்களில் ஆபத்தான முறையில் சிலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கண்ணுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, அவருடைய சகோதரர் தாமோதரன் , அவருடைய மனைவி சந்திரா ஆகியோர் இரு தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 10 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். "கள்ளச்சாராய சம்பவங்களுக்கு திமுக அரசுதான் முழு பொறுப்பேற்க வேண்டும். கள்ளச்சாராயத்தை ஒழிப்பேன் என்று கூறி முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின் இதுவரை அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை" என அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.












Click it and Unblock the Notifications