ஆபரேஷன் சவுத் இந்தியா: மோடி கொடுத்த டார்கெட்.. ஆட்டத்தை தொடங்கிய அண்ணாமலை! தமிழகத்தில் தாமரை மலருமா?
சென்னை: 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களுக்கான ஆரம்ப கட்ட பணியை தற்போது தமிழ்நாடு பாஜக செய்யத் தொடங்கி இருக்கிறது.
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்காக சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
Recommended Video

பாஜகவின் அரசியல் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்த அவர், தமிழ்நாட்டில் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் குறைந்தபட்சம் 5 தொகுதிகளாவது தாமரை மலர வேண்டும் என்று அறிவுறுத்தியதாக செய்திகள் வெளியாகின.

பூத் ஏஜெண்ட்
இதற்கான வேலைகளில் தற்போது தமிழ்நாடு பாஜக இறங்கி இருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜகவின் நிலை தொடர்பாக அக்கட்சித் தலைமை நடத்திய ரகசிய சர்வேயில் தேர்தல் பூத்துகளில் பாஜக பலவீனமாக இருப்பது தெரியவந்தது. எனவே பூத் ஏஜெண்டுகள் எண்ணிக்கையை அதிகரித்து திமுக, அதிமுகவுக்கு இணையாக பலப்படுத்தும் பணிகளில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இறங்கி இருக்கிறார்.

அதிமுக கூட்டணி
பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அதிமுகவில் அரங்கேறி வரும் உட்கட்சி குழப்பங்கள், அரசியல் மாற்றங்களை கவனித்து வருவதாகவும் 2024 மக்களவைத் தேர்தலிலும் அந்த கட்சியுடனேயே கூட்டணி தொடரும் எனவும் தகவல் தெரிவிக்கின்றன. பீகாரில் பாஜகவுடனான கூட்டணி உடைந்து ஆட்சி கவிழ்ந்ததால் தமிழ்நாடு பாஜகவுக்கு கூடுதல் அழுத்தத்தை டெல்லி தலைமை கொடுத்து வருகிறது.

ஆபரேசன் சவுத் இந்தியா
கடந்த ஜூலை மாதம் ஐதராபாத்தில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் ஆபரேசன் சவுத் இந்தியாவை அமித்ஷா அறிவித்ததில் இருந்தே 6 மாநிலங்களிலும் பாஜகவை வளர்க்கும் பணிகளில் அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் முழு வீச்சாக இறங்கியுள்ளனர். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான முன் தயாரிப்பு பணிகளையும் இப்போதே தொடங்கி இருக்கிறார் அண்ணாமலை. இதற்காக தமிழ்நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமற்ற சுற்றுப் பயணத்தை அவர் மேற்கொள்கிறார்.

அண்ணாமலை பயணம்
அண்ணாமலை மாவட்ட வாரியாக சென்று பூத் ஏஜெண்டுகள், உள்ளூர் பாஜக நிர்வாகிகளை சந்தித்து அவர்கள் தேவைகள், உள்ளூர் அரசியல் நிலவரங்கள், உட்கட்சி பூசல்கள், தேர்தல் வியூகங்கள் என பல விசயங்களை ஆலோசித்து கருத்துக்களை பெற்று வருகிறார். வார்டு, பூத் வாரியாக அண்ணாமலை கூட்டங்களை கூட்டி வருவதால் பாஜகவின் அடிமட்ட தொண்டர்களும் உற்சாகமடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.

நம்பிக்கை
அவர்களிடம் மத்திய அரசால் தமிழ்நாட்டிற்கு, கிராமங்களுக்கு கிடைத்திருக்கும் நல்ல திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அண்ணாமலையின் இந்த அதிகாரப்பூர்வமற்ற சுற்றுப்பயணத்தால் கட்சி எழுச்சி பெறும் என்று நம்புகிறார்கள் தாமரை தலைகள். இதுமட்டுமல்லாமல் தொடர்ந்து பொதுக்கூட்டங்களையும், பிரச்சார பயணிகளையும், மின் கட்டணம், சொத்து வரியை உயர்த்திய ஆளும் திமுக அரசுக்கு எதிரான போராட்டங்களை துரிதப்படுத்தவும் தமிழ்நாடு பாஜக முடிவு செய்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications