"எடப்பாடி பழனிசாமி முகத்தை மூடிக்கொண்டு போகவேண்டிய அவசியம் இல்லை”.. அண்ணாமலை சப்போர்ட்!
சென்னை: "எடப்பாடி பழனிசாமி முகத்தை மூடிக்கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான். அவரை முதல்வராக்க பாடுபடுவோம்." என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்தார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில் அதிமுகவில் நிலவும் உட்கட்சி பிரச்சனை குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. அமித்ஷாவை சந்தித்து விட்டு வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி காரில் கைக்குட்டையால் முகத்தை மூடியபடி இருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், "உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு என்பது அனைவருக்கும் தெரிந்தது. அப்படி இருக்கும் பட்சத்தில் எடப்பாடி பழனிசாமி முகத்தை மூடிக்கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான். அவரை முதல்வராக்க பாடுபடுவோம்." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அண்ணாமலை, "அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை பொதுச் செயலாளர் டி டி வி தினகரனை விரைவில் சந்திப்பேன். தமிழகத்தில் மாற்றம் கொடுப்பதற்கான ஒரே கட்சி பாஜக தான். இதனை ஏராளமான மக்கள் நம்பியுள்ளனர். வேறு வேலை காரணமாக பாஜக நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை எனில், பாஜகவில் அண்ணாமலை அதிருப்தியில் உள்ளார் என்று பேசப்படுகிறது.
நான் பாஜகவில் ஒரு தொண்டனாக பயணித்துக் கொண்டிருக்கிறேன். டெங்கு காய்ச்சல் காரணமாக சிபி ராதாகிருஷ்ணன் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை. இருந்தாலும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரிடம் தொலைபேசியில் பேசி வருகிறேன்.
மக்கள் பணத்தில் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் வரி கட்ட வேண்டி உள்ளது. நான் வாங்கிய நிலத்துக்கு சந்தை மதிப்பை விட கூடுதல் விலை கொடுத்துள்ளேன். இயற்கை விவசாயம் செய்வதற்காக விவசாய நிலம் வாங்கி உள்ளேன். அதற்கான வரியையும் கட்டியுள்ளேன். நான் தான் இளிச்சவாயனாக உள்ளேன்." எனக் கூறியுள்ளார்.
முன்னதாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "நான் ஏன் டெல்லி சென்றேன்? ஏன் அமித் ஷாவை சந்தித்தேன்? என்பது குறித்து ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வருகின்றன. மத்திய அமைச்சர் அமித்ஷாவை நான் சந்தித்தது வெளிப்படையானது. நான் டெல்லிக்கு செல்கிறேன் என்று பகிரங்கமாக செய்தி அளித்துவிட்டுதான் அவரை சந்திக்க சென்றேன். அரசாங்க காரில்தான் சென்றேன். இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை.
பரபரப்பான செய்திகளை கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஓரு சில ஊடகங்கள் பொய்யான செய்திகளை பரப்புகின்றனர். மேலும், நான் கைகுட்டையால் முகத்தை துடைப்பதை வீடியோ எடுத்து, முகத்தை மூடி செல்கிறார் என அரசியல் செய்கின்றனர். இது வெட்கக்கேடான விஷயம். ஊடகங்கள் இவ்வளவு தரம் தாழ்ந்து போவது எப்படி சரியாகும்? இனி ரெஸ்ட் ரூம் சென்றால் கூட ஊடகங்களிடம் சொல்லிவிட்டு தான் செல்ல வேண்டும் என்ற சூழல் வந்திருக்கிறது.
முகத்தை கைக்குட்டை வைத்து துடைத்ததை ஒரு வீடியோவாக எடுத்து, அதை வைத்து மலிவான அரசியல் செய்யும் அளவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். ஒரு முதலமைச்சர் எதை பேச வேண்டும் என்பது கூட அவருக்கு தெரியவில்லை. அதனால்தான், அவரை பொம்மை முதலமைச்சர் என்கிறோம். சிறுபிள்ளைத்தனமாக அவர் பேசியிருக்கிறார். இது முதலமைச்சருக்கு அழகல்ல." எனக் காட்டமாகக் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications