அண்ணாமலை பராக் பராக்.. நயினாருக்கு கல்தா கொடுக்கும் கமலாலயம்! நேரடியாக களமிறங்கும் நிதின் நவீன்
சென்னை: தமிழக அரசியலில் மீண்டும் அண்ணாமலையின் பெயர் பரபரப்பாக பேசப்படத் தொடங்கியுள்ளது. 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்குப் பிறகு தமிழக பாஜகவில் மிகப்பெரிய மாற்றங்கள் நடக்கப் போகின்றன என்ற பேச்சு வலுத்துள்ள நிலையில், "தமிழக பாஜகவை இனி நானே கவனிக்கிறேன்" என்று தேசிய தலைவர் நிதின் நபின் சொன்னதாகக் கூறப்படும் தகவல், அண்ணாமலை ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது. இதனையடுத்து நயினார் நாகேந்திரன் ஓரம் கட்டப்படலாம் என்ற தகவலும் கமலாலய வட்டாரங்களில் உலாவுகிறது.
கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் அதிகம் பேசப்பட்ட பாஜக தலைவராக அண்ணாமலை உருவெடுத்தார். திமுக அரசுக்கு எதிராக நேரடியாகவும் கடுமையாகவும் பேசிய அவர், இளைஞர்கள் மத்தியில் தனி ஆதரவை உருவாக்கினார்.

குறிப்பாக, 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியின்றி போட்டியிட்ட போதும், பாஜக கணிசமான வாக்குகளை பெற்றது. பல இடங்களில் இரண்டாம் இடத்தையும் பிடித்தது. இதற்கு முக்கிய காரணம் அண்ணாமலையின் தீவிர பிரசாரம் தான் என்று அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து கூறி வந்தனர்.
2026 சட்டமன்றத் தேர்தல்
ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு நிலைமைகள் மாறின. திமுகவை தோற்கடிக்க அதிமுக கூட்டணி அவசியம் என்று டெல்லி பாஜக தலைமை கருதியதாக சொல்லப்பட்டது. அதிமுக தரப்போ, அண்ணாமலை தலைவர் பதவியில் இருக்கும் வரை கூட்டணி சாத்தியமில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்தது. இதன் பின்னரே அண்ணாமலை அமைதியாக ஓரம் கட்டப்பட்டார். அவருக்கு பதிலாக நயினார் நாகேந்திரன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.
அண்ணாமலை
இந்த மாற்றம் நடந்த போதே, இதனால் பாஜகவின் வேகம் குறையும் என்று அண்ணாமலை ஆதரவாளர்கள் எச்சரித்திருந்தனர். ஆனால் அதை டெல்லி பாஜக தலைமை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியுடன் சென்றால் பெரிய வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே தேர்தல் திட்டங்கள் அமைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் தேர்தல் முடிவுகள் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.
பாஜக படுதோல்வி
27 தொகுதிகளில் பாஜக போட்டியிட்ட நிலையில், 26 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். சில இடங்களில் டெபாசிட் கூட கிடைக்கவில்லை. குறிப்பாக, கடந்த மக்களவைத் தேர்தலில் நல்ல வாக்குகள் கிடைத்த தொகுதிகளில் கூட இந்த முறை பாஜக படுதோல்வியை சந்தித்தது. இதனால் கட்சிக்குள் கடும் அதிருப்தி உருவானது. அண்ணாமலைக்கு கூட அவர் கேட்ட தொகுதி ஒதுக்கப்படவில்லை என்பது அவரது ஆதரவாளர்களை அதிகம் வேதனைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
தமிழக பாஜக
"கட்சியை வளர்த்த ஒருவரை இப்படியா நடத்த வேண்டும்?" என்ற கேள்வியை அவரது ஆதரவாளர்கள் எழுப்பி வந்தனர். இதற்கிடையில், தேர்தல் தோல்விக்கான காரணங்களை டெல்லி தலைமை தனித்தனியாக ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக பாஜக நிர்வாகிகளிடமிருந்து அறிக்கைகள் கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதோடு, அண்ணாமலையை மாற்றிய முடிவு சரியானதா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது.
பாஜக வளர்ச்சி
மற்றொரு பக்கம், அண்ணாமலை கடந்த சில நாட்களாக மிகவும் அமைதியாக இருப்பதும் தலைமையை யோசிக்க வைத்துள்ளது. தேர்தல் முடிவுகள் குறித்து அவர் பெரிய அளவில் எந்த கருத்தையும் வெளியிடவில்லை. பொதுநிகழ்ச்சிகளிலும் குறைவாகவே பங்கேற்று வருகிறார். இதுவும் அரசியல் வட்டாரங்களில் பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பாஜக வளர்ச்சி அடைய வேண்டுமெனில் தனித்துவமான தலைமை தேவை என்றும், அதற்கான முகமாக அண்ணாமலை மீண்டும் வரலாம் என்றும் அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
மீண்டும் அண்ணாமலை
குறிப்பாக, திமுக மற்றும் அதிமுக மீது அதிரடியான அரசியல் தாக்குதலை நடத்தக்கூடிய ஒரே தலைவர் அண்ணாமலை தான் என்ற கருத்தும் அவர்களிடம் உள்ளது. அதேநேரத்தில், அதிமுக கூட்டணியை நம்பி சென்றதே இந்த தோல்விக்கு காரணம் என்ற விமர்சனமும் பாஜகவுக்குள் வலுத்து வருகிறது. கூட்டணிக்குள் இருந்தும் பாஜக பல இடங்களில் முழுமையான ஒத்துழைப்பைப் பெறவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இந்த சூழலில், தமிழக பாஜக அமைப்பை முழுமையாக மறுசீரமைக்க டெல்லி தலைமையினர் முடிவு செய்துள்ளதாகவும், அண்ணாமலைக்கு மீண்டும் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்றும் கமலாலய வட்டாரங்கள் சொல்கின்றன.












Click it and Unblock the Notifications