மும்மொழி கல்விக் கொள்கை: அன்பில் மகேஷ் Vs அண்ணாமலை.. வெடிக்கும் வார்த்தை போர்!
சென்னை: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், 'புதிய கல்வி கொள்கையை ஆராய்ந்தால் அது ஆர்எஸ்எஸ் கல்வி கொள்கை. என்று தெரியும். அறிவியல் மொழி தான் எங்களின் மூன்றாவது மொழி.' என கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, 'மத்திய அரசு வழங்கிய நிதியை ஏப்பம் விட்டுவிட்டு, வாட்சப்பில் வருவதை எல்லாம் பேச வெட்கமாக இல்லையா உதயநிதி ரசிகர் மன்றத் தலைவரே.' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
புதிய கல்வி கொள்கை, மும்மொழி கொள்கை, இந்தி திணிப்பு, தொகுதி மறுசீரமைப்பு, பட்ஜெட்டில் ரூபாய் குறியீடு என்று கடந்த சில வாரங்களாக மத்திய, மாநில அரசு இடையேயான வாக்குவாதம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலும் மும்மொழி கல்விக் கொள்கை விவகாரத்தில் தொடர்ந்து கருத்து மோதல்கள் நிலவிக் கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தன் எக்ஸ் தள பக்கத்தில் நேற்று இரவு வெளியிட்டிருந்த பதிவில், "அறிவியல் மொழி தான் எங்களின் மூன்றாவது மொழி. தேசிய கல்விக் கொள்கையை ஆராய்ந்தால் அது NEP 2020 அல்ல RSS 2020 என்பது புரியும். தமிழ்நாட்டின் கல்வி முறை தான் இந்தியாவின் கல்வி முறைக்கே தாயாக உள்ளது.
எங்களின் மூன்றாவது மொழி C, C++, Java, AI போன்ற அறிவியல் மொழிகள் தான்." என்று கூறியிருந்தார். மேலும் அந்தப் பதிவில் #StopHindiImposition என்ற ஹேஷ்டேகும் இணைத்திருந்தார். இந்தப் பதிவை திமுக மற்றும் அவர்களின் கூட்டணி கட்சிகள் வரவேற்க.. பாஜக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன் எக்ஸ் தள பக்கத்தில் இன்று மாலை வெளியிட்டுள்ள பதிவில், "6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு, தகவல் மற்றும் தகவல்தொடர்பு தொழில்நுட்பம் (ICT) பாடத்தினைக் கற்றுக் கொடுக்க, மத்திய அரசு வழங்கிய நிதியை ஏப்பம் விட்டுவிட்டு, வாட்சப்பில் வருவதை எல்லாம் பேச வெட்கமாக இல்லையா உதயநிதி ரசிகர் மன்றத் தலைவரே?.
அண்டை மாநிலமான கேரளாவில், ஐசிடி (ICT) பாடத்திட்டம் தமிழ் உட்பட மும்மொழிகளில் கற்பிக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் வெறும் வாய்ப் பேச்சு மட்டும் தான், செயலில் ஒன்றும் இல்லை. உங்க மகன் மட்டும் மும்மொழிகள் கற்கலாம், ஆனால் ஏழை எளியோரின் பிள்ளைகள், மும்மொழிகள் கற்கக் கூடாது என்று தடுக்கிறீர்களே? என்ன நியாயம் இது?." என்று கேள்வி கூறியுள்ளார்.
இந்தப் பதிவும் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அண்ணாமலையின் பதிவை பாஜகவினர் பகிர்ந்து வரும் நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து பதிலடி கொடுத்து வருகிறார்கள். அன்பில் மகேஷ், அண்ணாமலை இடையேயான இந்த வாக்குவாதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications