அண்ணாமலை பேச்சு- ஒட்டியும், வெட்டியும் பதிவிட்டு வன்முறையை தூண்டுவதா? திருமாவளவனுக்கு பாஜக கண்டனம்
அண்ணாமலையின் பேச்சு விவகாரத்தில் திருமாவளவனுக்கு பாஜகவின் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையில் பேச்சை ஒட்டியும் வெட்டியும் பதிவிட்டு வன்முறையை தூண்டுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்பி தமது ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலையின் பேச்சு வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், உங்களுடைய கைகளில் துப்பாக்கி இருக்கிறது.. துப்பாக்கிக்குள் குண்டு இருக்கிறது. ஆர்டர் கொடுக்க மோடி இருக்கிறார். நீங்க சுட்டு தள்ளிகிட்டு வந்துகிட்டே இருங்க..மிச்சத்தை பாரதிய ஜனதா பார்த்து கொள்ளும் என கூறுவதாக இடம்பெற்றுள்ளது.

இதனை பகிர்ந்த திருமாவளவன், ஆர்டர் கொடுக்க மோடி இருக்கிறார்; சுட்டுத்தள்ளுங்கள்' என ஒருவர் பேசுவதை அசட்டுத் துணிச்சல் என்பதா? முதிர்ச்சியில்லா அரைவேக்காட்டுத்தனம் என்பதா? திட்டமிட்டே வன்முறையைத் தூண்டும் சங்பரிவார் கும்பலின் கலாச்சாரம் என்பதா? எதுவாயினும் இது தலைமைப் பண்புக்குரியதாகுமா? மோடியும் என்னைப்போன்ற ஒரு பொறுப்பற்ற நபர்தான் என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறாரா? இவர்மீது வழக்குப்பதிந்து கைது செய்திருக்க வேண்டாமா? தில்லியை ஆளும் கட்சிக்கு மாநிலக் கிளைத்தலைவர் என்றால் அவர்மீது சட்டம் பாயாதா? தமிழ்நாடு முதல்வ மு.க.ஸ்டாலின், அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் என பதிவிட்டிருந்தார்.
ஒட்டியும், வெட்டியும் பதிவிட்டு வன்முறையை தூண்டுவது தலைமைப்பண்புக்குரியதா? இது தான் வி சி க கலாச்சாரமா? பொறுப்பற்ற முறையில் முதிர்ச்சியற்ற அரசியலை செய்வதா? @arivalayam கூட்டணி தலைவர் என்றால் சட்டம் பாயாதா? இவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்ய வேண்டும் @CMOTamilnadu அவர்களே. https://t.co/n6VXIF2bVR
— Narayanan Thirupathy (@narayanantbjp) February 26, 2023
இதற்கு தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாராயணன் திருப்பதி ட்விட்டரில் அளித்துள்ள பதில்: ஒட்டியும், வெட்டியும் பதிவிட்டு வன்முறையை தூண்டுவது தலைமைப்பண்புக்குரியதா? இது தான் வி சி க கலாச்சாரமா? பொறுப்பற்ற முறையில் முதிர்ச்சியற்ற அரசியலை செய்வதா? திமுக கூட்டணி தலைவர் என்றால் சட்டம் பாயாதா? இவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்ய வேண்டும் தமிழ்நாடு முதல்வர் அவர்களே. இவ்வாறு நாராயணன் திருப்பதி பதிவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி ராணுவ வீரர் படுகொலையை கண்டித்து நடைபெற்ற சென்னை உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய அண்ணாமலை, கொல்லப்பட்ட ராணுவ வீரர் குடும்பத்துக்கு உடனடியாக ரூ10 லட்சம் காசோலை அளிக்கிறோம். அதைத் தாண்டி இரு குழந்தைகளையும் காலத்துக்கும் படிக்க வைக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். கட்சியின் தலைவர்கள் இருக்கிறோம். அது எங்களுடைய பொறுப்பு. எதற்கு இதை செய்கிறோம் எனில் பார்டரில் இருக்கக் கூடிய ஒரு ஒரு ராணுவ வீரருக்கும் இங்கே இருந்து ஒரு உரக்கமாக ஒரு செய்தியை சொல்லுகிறோம். அரசு உங்களோடு இல்லை என்றாலும் நாங்கள் உங்களோடு இருப்போம் என்ற செய்தியை சொல்கிறோம். உங்களுடைய கையில் துப்பாக்கி இருக்கிறது. ஆர்டர் கொடுக்க மோடி இருக்கிறார். சுட்டுத் தள்ளிட்டு வந்துகிட்டே இருங்க..மிச்சதை பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் பார்த்துக் கொள்ளும் என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications