தமிழ் புத்தாண்டு அன்று DMK Files வந்துச்சுல்ல! டி.ஆர்.பாலுவின் அவதூறு வழக்கில் இன்று அண்ணாமலை ஆஜர்
சென்னை: திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் பொருளாளருமான டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று இரண்டாவது முறையாக நேரில் ஆஜராகிறார்.
தமிழகத்தில் திமுகவுக்கும் பாஜகவுக்கும் கடும் மோதல் போக்கு இருந்து வருகிறது. அதிலும் பாஜக தலைவராக அண்ணாமலை பதவியேற்ற பிறகு மேலும் தீவிரமாக அதிகரித்துள்ளது. தனி மனித தாக்குதல்களும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளையும் திமுக மீது பாஜக வைத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தமிழகத்தில் திமுக, அதிமுக என்ற இரு கட்சிகளே பிரதான கட்சிகளாக இருந்து வரும் நிலையில் அதிமுகவை ஓரம்கட்டிவிட்டு திமுக வெர்சஸ் பாஜக என்ற தோற்றத்தை உருவாக்கவே பாஜக நிர்வாகிகள் இது போல் செய்வதாகவும் அரசியல் நிபுணர்கள் கூறியிருந்ததை நாம் கேட்டிருப்போம்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அண்ணாமலை ட்விட்டரில் பதிவு செய்த வீடியோ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அண்ணாமலை கட்டியிருந்ததாக கூறப்படும் ரபேல் வாட்ச்க்கான பில்லை திமுக கேட்க போய் அவரோ வாட்ச் பில், திமுகவின் சொத்து கணக்கு, தன்னுடைய சொத்து கணக்குகளையும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் அன்றைய தினம் திமுகவின் ஊழல் பட்டியல் என்ற பெயரில் வெளியிட்டப்பட்ட அந்த கோப்புகளில் டி.ஆர்.பாலுவின் பெயரும் இருந்தது. அவர் ஊழல் செய்தே கோடிக்கணக்கான சொத்துகளை சேர்த்ததாக அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து அண்ணாமலை தன் மீது கூறிய புகார்களுக்கு ஆதாரத்தை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் பொது மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவை இரண்டில் ஒன்றை 15 நாட்களுக்குள் செய்யாவிட்டால் அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன் என டி.ஆர்.பாலு கூறியிருந்தார். அந்த வகையில் அண்ணாமலை தான் கூறிய கருத்தில் பின்வாங்க மாட்டேன் என்றார். இதையடுத்து திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு அண்ணாமலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை பெருநகர 17ஆவது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
டி.ஆர். பாலு தனது மனுவில் 1957 ஆம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து எம்பியாகவும் மத்திய அமைச்சராகவும் பதவிகளை வகித்த எனக்கு பொதுமக்கள் மத்தியில் நற்பெயரும் மரியாதையும் உள்ளது. அதை களங்கப்படுத்தும் நோக்கில் அண்ணாமலை அவதூறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார் என பாலு குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த மனு நீதிபதி அனிதா ஆனந்த் முன் கடந்த மே மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு ஆஜராகி பிரமாண வாக்குமூலம் அளித்தார். இந்த நிலையில் வழக்கு கடந்த ஜூன் 15ஆம் தேதி மீண்டும் விசாரணை வந்தது. அப்போது டி.ஆர்.பாலு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எங்கள் குடும்பத்தினர் 21 நிறுவனங்களில் பல கோடிகளில் முதலீடு செய்துள்ளதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
பொய்யான குற்றச்சாட்டை கூறி என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக அண்ணாமலை எனக்கு நஷ்டஈடு தர வேண்டும். மேலும் அவர் மீது குற்றவியல் அவதூறு சட்டத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்த வழக்கு விசாரணைக்கு ஜூலை 14 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.
இதைத் தொடர்ந்து நீதிமன்ற ஆணைக்கிணங்க சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார். அதன்படி அந்த தேதியில் நேரில் ஆஜரான அண்ணாமலைக்கு வழக்கின் நகல் வழங்கப்பட்டது. அதன்பிறகு இரு முறை இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது அண்ணாமலை ஆஜராகவில்லை, அவருடைய வழக்கறிஞர்தான் ஆஜரானார். இந்த நிலையில் டி.ஆர்.பாலு தாக்கல் செய்த வழக்கில் இன்றைய தினம் மாலை 4 மணிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை ஆஜராகிறார். அப்போது அவர் இந்த வழக்கில் ஏதேனும் ஆதாரத்தை சமர்ப்பிப்பார் என தெரிகிறது.











Click it and Unblock the Notifications