மீண்டு வந்த சக்தி.. குஷ்பு அக்கா நீங்கள் பீனிக்ஸ் பறவை... அண்ணாமலை நெகிழ்ச்சி
சாம்பலில் இருந்து உயிர்த்தெழுந்து வந்த பீனிக்ஸ் பறவை என்று குஷ்புவை பாராட்டியுள்ளார் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை.
சென்னை: நீங்கள் சாம்பலில் இருந்து எழும் பீனிக்ஸ் பறவை போல என்று குஷ்புவை பாராட்டியுள்ளார் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை. அந்த குழந்தைப் பருவ அதிர்ச்சியில் மனம் சிசைந்து போகாமல், அதிலிருந்து மீண்டு வந்து இன்று நீங்கள் இருக்கும் நிலையை அடைவது எளிதல்ல. நீங்கள் ஒரு உத்வேகம் என்றும் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் சமூக ஈடுபாடு, அரசியலிலும் தீவிரமாக பயணித்து வருகிறார் குஷ்பு. பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் என்று தீவிரமாக இயங்கி வருகிறார்.
இவர் பத்திரிக்கையாளர் பர்க்கா தத் உடனான பெண் மைய உரையாடலில் பங்கேற்று பேசியபோது, தனது சிறுவயது துயரத்தை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
ஆணோ பெண்ணோ குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகிறார்கள். பின்னர் வாழ்க்கை முழுவதும் அந்த பாதிப்பு இருக்கும். எட்டு வயது சிறுமியாக இருந்தபோது நானும் பெற்ற தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன். மனைவியை அடிப்பதும் ஒரே மகளிடம் தவறாக நடந்து கொள்வதும் பிறப்புரிமை என்று எனது தந்தை இருந்தார்.
எனக்கு நேர்ந்த துயரத்திற்கு எதிராக போராடும் துணிச்சல் அப்போது இல்லை . பதினைந்து வயதில் தான் அந்த துணிச்சல் எல்லாம் வந்தது. என் தந்தை பொறுப்பில்லாத தந்தையாக இருந்தார். எனது 16 வயதில் அவர் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றார் என்று தனது உள்ளத்தில் புதைந்து கிடைந்த பயங்கரமான நிகழ்ச்சியை குமுறலாக வெளிப்படுத்தி இருந்தார்.

குஷ்புவுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்தான் இன்று பெரும்பாலான ஊடகங்களில் விவாத பொருளாகி இருக்கிறது. இது குறித்து தற்போது வெளிப்படுத்தியது ஏன் என்று ஊடகங்களில் கேட்ட போது, தனக்கு நேர்ந்த துயரத்தை பாதிப்பை அப்போது வெளிப்படுத்த தைரியம் இல்லை என்றும் தன்னைப்போல பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக வெளியே கூற வேண்டும் அவர்களுக்கு உதவி செய்யத்தான் நாங்கள் இருக்கிறோம் என்றும் குஷ்பு தெரிவித்தார்.
இந்த மாதிரி சிக்கல் எல்லாம் இருந்தாலும் அவற்றை எல்லாம் சமாளித்து மேலே வந்திருக்கும் குஷ்புவை பார்த்து வியக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. சாம்பலில் இருந்து உயிர்த்தெழுந்து வந்த பீனிக்ஸ் பறவை என்று நெகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை, தனது பதிவில், "அக்கா உங்களுக்கு அதிக சக்தி இருக்கிறது. நீங்கள் சாம்பலில் இருந்து எழும் பீனிக்ஸ் பறவை போல என்று பதிவிட்டுள்ளார். அந்த குழந்தைப் பருவ அதிர்ச்சியில் மனம் சிசைந்து போகாமல், அதிலிருந்து மீண்டு வந்து இன்று நீங்கள் இருக்கும் நிலையை அடைவது எளிதல்ல. நீங்கள் ஒரு உத்வேகம்''என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications