9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு... நாளை வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்..!
சென்னை: 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதியை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 ஆகிய இரண்டு தேதிகளில் இந்த தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் வார்டு மறுவரையறை காரணமாக கடந்த 2019-ம் ஆண்டு இந்த மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை.
இதனிடையே செப்டம்பர் 15-ம் தேதிக்குள் விடுபட்ட 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அந்த உத்தரவை ஏற்று செயல்படுத்தும் வகையில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பை இன்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் வெளியிட்டுள்ளார்.
அதன்படி 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் நாளை மறுதினம், அதாவது செப்டம்பர் 15-ம் தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 22-ம் தேதி வேட்புமனுத்தாக்கல் நிறைவடையும் என்றும் வேட்புமனு மீதான பரிசீலனை செப்டம்பர் 23-ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேட்புமனுவை வாபஸ் பெற்றுக்கொள்ள கடைசி நாள் செப்டம்பர் 25-ம் தேதி என்றும் வாக்குப்பதிவு அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12-ம் தேதி நடைபெறும் எனத் தெரிவித்துள்ள மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், வாக்குப்பதிவு முடிந்த அடுத்த 30 நாட்களுக்குள் தேர்தல் செலவுகளை வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
அவ்வாறு செய்யாதவர்கள் 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி மன்ற கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய தலைவர், மாவட்ட கவுன்சிலர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், என 9 மாவட்டங்களில் 3 ஆயிரத்து 67 இடங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது.
இதில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மற்றும் கொரோனா நோயாளிகள் வாக்குசெலுத்தலாம் என்றும் அவர்களுக்கான ஏற்பாடுகள் மாநில தேர்தல் ஆணையத்தால் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ., எம்.பி. தேர்தல்களை காட்டிலும் உள்ளாட்சித் தேர்தலின் போது தான் அதிகமான சண்டை சச்சரவுகள் ஏற்படுவது வழக்கம். மாமன், மச்சானாக இருந்தவர்கள் பலர் ஊரில் யார் பெரிய ஆளு என்கிற கோதாவில் குதித்து ஆயுள் உள்ளவரை பேச்சுவார்த்தையின்றி எதிரிகளாக காலத்தை கழிக்கும் நிகழ்வுகளும் உள்ளன.
இதனால் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகளை மிகுந்த கவனத்தோடு கொரோனா பரவலுக்கு மத்தியில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உற்று நோக்கி வருகிறது.












Click it and Unblock the Notifications