டெல்லிக்கு பறக்கும் ஸ்டாலின்..அதே நாளில் திமுக ‘முக்கிய மீட்டிங்’..! மா.செ.க்களுக்கு பறந்த உத்தரவு.!
சென்னை: மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், ஜூன் 1ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான லோக்சபா தேர்தல் தற்போது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல்கள் நடைபெற்று இருக்கும் நிலையில் இன்னும் ஒரு கட்ட தேர்தல் அதாவது கடைசி கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது.

ஜூன் ஒன்றாம் தேதி ஏழாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இந்திய திருநாட்டை அடுத்து ஆளப்போகும் பிரதமர் யார் என்பதை அறிய அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
லோக் சபா தேர்தல்: பாஜகவை பொறுத்தவரை பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக போகிறார், 400 தொகுதிகளுக்கு மேல் வென்று பாஜக நிச்சயம் ஹாட்ரிக் வெற்றி பெறும் என பாஜகவினர் கூறி வருகின்றனர். பாஜகவுக்காக பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலரும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்
வாக்கு எண்ணிக்கை: காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக கருதப்படும் ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் குறிப்பாக கடைசி கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பிரச்சாரமானது சூடு பிடித்திருக்கிறது. லோக்சபா தேர்தல் 2024 கடைசி மற்றும் ஏழாவது கட்ட தேர்தல் எட்டு மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 904 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இதற்கடுத்து ஜுன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.
முதலமைச்சர் ஸ்டாலின்: ஜூன் ஒன்றாம் தேதி டெல்லியில் நடைபெற இருக்கும் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறார். இதை அடுத்து சென்னை அண்ணா சாலையில் உள்ள திமுக தலைமையகமான அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சி மூத்த நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் மூத்த அமைச்சர்களான கே.என் நேரு , ஐ.பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆலோசனையில் டெல்லி இந்தியா கூட்டணியில் பங்கேற்பது குறித்தும் வாக்கு எண்ணிக்கை குறித்தும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: இந்த ஆலோசனைக்குப் பிறகு மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், ஜூன் 1ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுரையின்படி, ஜூன்-4 அன்று நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை குறித்து கலந்தாலோசித்திட, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் தலைமையில் "மாவட்டக் கழகச் செயலாளர்கள் - கழக வேட்பாளர்கள் தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்தாலோசனைக் கூட்டம்" வருகிற 01-06-2024 சனிக்கிழமை காலை 11.00 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.

ஆலோசனை: இக்கூட்டத்தில் தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ, எம்.பி., அவர்கள் வாக்கு எண்ணிக்கையின்போது தலைமை முகவர் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள் குறித்து ஆலோசனை வழங்குவார். அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் கழக வேட்பாளர்கள் தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications