அப்படி போடு.. விறுவிறுப்பாகும் விக்கிரவாண்டி தேர்தல்! களத்தில் இறங்கும் பாமக.. தோள் கொடுக்கும் பாஜக!
சென்னை: தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10 ம் தேதி அன்று நடைபெற உள்ள நிலையில், பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் நான்காம் தேதி வெளியாகின. பாஜக கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றார்.

இந்த நிலையில் நாடு முழுவதும் காலியாக உள்ள 13 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் திடீரென அறிவித்திருக்கிறது. அதில் தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதியும் அடங்கும்.
கடந்த தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் புகழேந்தி மரணமடைந்த நிலையில் அங்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அங்கு திமுகவே தனது வேட்பாளரை களம் இறக்குகிறது. அன்னியூர் சிவா விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவார் என நேற்று அறிவிக்கப்பட்டது. அதிமுக இன்னும் தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை. அதே நேரத்தில் அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.வும் கடந்த தேர்தலில் புகழேந்தியிடம் தோற்ற முத்தமிழ்ச் செல்வனே போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிடுவார் என அறிவித்துள்ளார் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். விழுப்புரத்தைச் சேர்ந்த அபிநயா கடந்த மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு 60 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தார். பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில், அவரது வாக்குகள் பலவும் அபிநயாவுக்கு சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மக்களவை தேர்தலைப் போலவே இந்த இடைத் தேர்தலில் நான்கு முனை போட்டி உருவாகியுள்ளது. திமுக-அதிமுக-நாம் தமிழர் கட்சிகள் தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில்ம் தற்போது பாமகவும் களத்தில் குதித்துள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நிலைப்பாடு குறித்து விவாதிப்பதற்காக நேற்று பாட்டாளி மக்கள் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் தைலாபுரத்தில் உள்ள கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.

அதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கெளரவ தலைவர் ஜி.கே. மணி, மாநில நிர்வாகிகளான வடிவேல் ராவணன், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே மூர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருக்கைச்சூர் ஆறுமுகம், பாமக முன்னாள் பொதுச்செயலாளர் தீரன், மாநில வன்னியர் சங்க தலைவர் பூ.தா அருள்மொழி, பாமக முன்னாள் எம்.பி மருத்துவர் செந்தில், பாமக வழக்கறிஞர் பாலு, மாநில பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் இறுதியில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, விக்கிரவாண்டி இடைதேர்தலில் பாமக போட்டியிடுவது குறித்து நிர்வாகக் குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசி முடிவெடுத்த பின்னர் அறிவிக்கப்படும் என்றார். இதனையடுத்து தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பாஜக தலைவர் அண்ணாமலையிடம் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாஜக தலைமையிலான எண்டிஏ கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10 ம் தேதி அன்று நடைபெற உள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் ஒருமனதாக எடுத்த முடிவின்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியானது விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று அறிவிக்கப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் வெற்றி பெற அனைவரும் இணைந்து பாடுபடுவோம்! வெற்றி பெறுவோம்!” என கூறப்படுகிறது. இதன் மூலம் விக்கிரவாண்டி தேர்தலில் பாமக களமிறங்குவது உறுதியாகியுள்ளது. விரைவில் வேட்பாளரும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications