ரூ.6000 பெற ரேஷன் கடைகளில் விண்ணப்பம்! சென்னையில் வசிக்கும் வெளி மாவட்ட மக்கள் மிஸ் பண்ணாதீங்க
சென்னை: மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, சென்னையில் வசிக்கும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 4ம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை, ஒட்டு மொத்த சென்னையையும் புரட்டி போட்டுவிட்டது. 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளம் சென்னைக்கு முக்கிய பாடமாக இருந்த போதும், அந்த அனுபவத்தை கொண்டு இந்த புயல் மழையை எதிர்கொள்ள முடியவில்லை. மழை நின்று ஒரு வாரத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில் தற்போதுதான் சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளது. இருப்பினும் புறநகர் பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியாததால் மின்சாரமின்றி அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.

ஒரே நாளில் 40 செ.மீ வரை மழை பெய்ததால்தான் இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. சென்னையின் ஆண்டு சராசரி மழை அளவு 100 மிமீ முதல் 1100 மி.மீ தான். ஆனால் இதில் மூன்றில் ஒரு பகுதி மழை கடந்த 4ம் தேதி பெய்திருக்கிறது. எனவேதான் வெள்ளம் வடிய அதிக நாட்கள் ஆகியுள்ளன. வெள்ளத்தில் ஏராளமான பொருட்கள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. சுமார் 4 லட்சம் வாகனங்கள் சேதமடைந்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இதில் பெரும்பாலும் பைக்குகளும், ஆட்டோக்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் சாமானிய மக்களின் வாழ்வில் கூடுதல் பொருளாதார சுமை ஏறியிருக்கிறது.
இந்நிலையில் பாதிப்புகளை எதிர்கொண்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் ரூ.6000 அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "மிக்ஜாம் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 6 ஆயிரம் வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரணத் தொகையினை, பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும்.
அதுமட்டுமின்றி, புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 4 இலட்சத்திலிருந்து, 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் தொகை ரூபாய் 5 ஆயிரத்தினை, ரூபாய் 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிவாரண நிதியானது ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்திருக்கிறது.
ஆனால் சென்னையில் வசிப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கான ரேஷன் கார்டுகள் அவர்களுக்கு சொந்தமான ஊர் முகவரியில்தான் இருக்கிறது. இப்படி இருக்கையில், இவர்களுக்கான நிவாரணம் வழங்கப்படுமா? என கேள்வி எழுந்தது. இது குறித்து அரசு விளக்கமளித்திருக்கிறது. அதாவது, புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு நிவாரண விண்ணப்பம் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் என்றும், விண்ணப்பத்தில் வங்கி எண், இடம் பூர்த்தி செய்துகொடுத்தால் அதிகாரிகள் ஆய்வுக்கு பின் நிவாரணம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நிவாரணம் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அரசின் இந்த அறிவிப்பால் சென்னையில் வசிக்கும் மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications