கொத்து கொத்தாக உதிரும் 'இலைகள்'.. பட்டமரமாகும் சீமான்..மேலும் ஒரு மா.செ. நாதகவை விட்டு தப்பி ஓட்டம்!
சென்னை: நாம் தமிழர் கட்சியில் இருந்து ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் பாவேந்தன் விலகுவதாக அறிவித்துள்ளார். தந்தை பெரியாரை தமிழ்த் தேசியத்துக்கு எதிராக முன்னிறுத்துவது தமிழர் நிலத்துக்கு பேராபத்தாக முடியும்; முன்னுக்குப் பின் முரணாக சீமான் பேசுவது நாம் தமிழர் கட்சியின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் தமது விலகல் கடிதத்தில் பாவேந்தன் குறிப்பிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சியில், தந்தை பெரியாரை ஏற்பவர்கள் இருந்தால் வெளியேறிவிடலாம் என பகிரங்மாக அறிவித்தார் சீமான். அதேபோல, நாம் தமிழர் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் விலகுவதை குறிப்பிட்ட சீமான், இது களைகள் உதிரும் காலம் என குறிப்பிட்டார்.

தற்போது பெரும் எண்ணிக்கையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் தொடர்ந்து வெளியேறுவதால் களைகள் அனைத்தும் உதிர்ந்த பட்டமரம் போல சீமான் உருமாறிவிடுவார் என்கின்றனர் அக்கட்சியில் இருந்து விலகிய முன்னாள் நிர்வாகிகள்.
இந்த வரிசையில் நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் பாவேந்தன் சீமானுக்கு எழுதிய கடிதத்தில் அக்கட்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீமானுக்கு பாவேந்தன் எழுதிய கடிதம்: தமிழ் தேசிய சிந்தனைகள் என் தந்தை வழியில் இருந்த நான் உங்கள் வருகைக்கு முன்பே மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியில்
வே.ஆனைமுத்து தலைமை ஏற்று பணியாற்றி வந்தேன். அரசியல் மாற்றம் வரவேண்டும் என்பதற்காக நாம் தமிழர் கட்சியில் இணைந்தேன். இணைந்த நாள் முதல் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என அனைத்து களப்பணிகளை வழி நடத்தினேன்.

2019 ஆம் ஆண்டு அரக்கோணம் லோக்சபா தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்டு ஆறு சட்டசபை தொகுதிகளிலும் கடுமையாக உழைத்து மக்கள் போராட்டங்களில் மக்களில் ஒருவனாக உண்மையும் நேர்மையுமாக நின்று நாம் தமிழர் கட்சிக்கு வழி சேர்த்து வாக்கு சேகரித்தேன். அதில் பெரியார் உணர்வாளர்களுடைய வாக்குகளும் அடங்கும். அது மட்டுமன்றி 2021 ஆம் ஆண்டு சோளிங்கர் சட்டசபை தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மாற்று அரசியலை முன்வைத்து கொள்கை வென்றிட தேர்தல் களத்தில் பணியாற்றினேன். இதனால் இரண்டு தேர்தலில் போட்டியிட்டு பெரும் பொருளாதாரத்தை லட்சக்கணக்கில் இழந்த போதும் உங்களுடன் உறுதியாக பயணித்தேன்.
ஆனால் இன்று நீங்கள் கொள்கைக்கு முரணாக முன்னுக்குப் பின் பேசுவது ஏற்புடையது அல்ல. பெரியாரை விமர்சித்து, தமிழ் தேசியத்துக்கு எதிராக பெரியாரை முன்னிறுத்துவது தமிழர் நிலத்தின் மக்களுக்கு பேராபத்தாக முடியும்.
அது மட்டுமின்றி பிரபாகரனையும் பெரியாரையும் எதிர் எதிராக நிற்க வைப்பது தமிழ்த் தேசிய அரசியலுக்கு எதிரான பாசிச பாஜகவுக்கும் சங்பரிவாரங்களுக்கும் விருந்தாக அமையும். நாம் தமிழர் கட்சியை வீழ்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் தங்களின் இத்தகைய செயல்பாடுகளை விரும்பாத காரணத்தால் நாம் தமிழர் கட்சியில் நான் வகித்து வந்த ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகிக் கொள்கிறேன். இவ்வாறு பாவேந்தன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications