சீமானுக்கு அதிர்ச்சி.. நாம் தமிழர் கட்சியில் இருந்து மேலும் ஒரு முக்கிய நிர்வாகி விலகல்!
சென்னை: நாம் தமிழர் கட்சியின் மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இளவஞ்சி அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். சமீப நாட்களாகவே கட்சியின் செயல்பாடுகள் தனக்கு பிடிக்கவில்லை என்றும், கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று கூறியும் கட்சியில் இருந்து இளவஞ்சி விலகியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்து வந்தவர் இளவஞ்சி. இந்த நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக இளவஞ்சி அறிவித்துளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், நாம் தமிழர் கட்சியின் தற்போதைய செயல்பாடுகள் தனக்கு பிடிக்கவில்லை என்றும், குறிப்பாக கட்சியில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே நாம் தமிழர் கட்சியில் இருந்து அடுத்தடுத்து மாவட்ட நிர்வாகிகள் விலகி வருகின்றர். குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் மேற்கு, மத்திய, கிழக்கு என 3 மாவட்ட தலைவர்களும் கட்சியில் செயல்பாடுகளில் அதிருப்தி தெரிவித்து விலகியிருந்தனர். இந்த நிலையில் தான் கட்சியின் முக்கிய பொறுப்பான, மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து இளவஞ்சி விலகியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் இளவஞ்சி கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திருவிக நகரில் போட்டியிட்டார். கடந்த சிலநாட்களாகவே இவர் நாம் தமிழர் கட்சி மீது அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. சட்டமன்ற தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட வேண்டும் என்றால் 50 சதவீதம் பெண்கள், 50 சதவீதம் ஆண்களுக்கு என்று சரிக்கு சரி பங்கு வழங்கப்படுகிறது.
ஆனால் கட்சியில் உள்ள பதவிகள் என்று எடுத்துக்கொண்டால் இப்படி வழங்கப்படுவதில்லை என்று இளவஞ்சி குற்றச்சாட்டு வைத்திருந்தார். குறிப்பாக கட்சியின் பொதுச்செயலாளராக ஒரு பெண் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று சீமான் தலைமையில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்திலேயே இளவஞ்சி கூறியிருந்தார். இது அப்போதே கட்சியில் சலசலைப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் தான் இளவஞ்சி கட்சியில் இருந்து விலகியுள்ளார்.












Click it and Unblock the Notifications