அமைச்சர் ஐ பெரியசாமிக்கு வழங்கப்பட்ட முக்கிய ஆவணங்கள்.. வழக்கில் சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து மறு ஆய்விற்கு எடுத்த நிலையில், வழக்கின் ஆவணங்கள் அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பிடம் வழங்கப்பட்டது.
கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு, ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது கடந்த 2012-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறும் போது, "அமைச்சர் ஐ பெரியசாமிக்கு எதிரான வழக்கை பொறுத்தவரை வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனுவும், வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவும் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், வழக்கு தொடர அனுமதி வழங்கிய விவகாரத்தின் அடிப்படையில் சிறப்பு நீதிமன்றம் அவரை விடுவித்து இருக்கிறது. கீழமை நீதிமன்றங்களின் செயல்பாடுகளை பார்க்கும்போது நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும். இந்த வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதால் என்னை வில்லனாக பார்க்கின்றனர். தனிப்பட்ட முறையில் இந்த வழக்குகளை தான் விசாரணைக்கு எடுக்கவில்லை என்றார்
இந்நிலையில் அவர் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்துள்ளது.
அப்போது ஐ.பெரியசாமி சார்பில் வழக்கறிஞர் E.V. சந்துரு ஆஜராகி, இந்த வழக்கின் நோட்டீஸ் தங்களுக்கு கிடைத்து விட்ட நிலையில் வழக்கின் ஆவணங்கள் இன்னும் வழங்கப்படவில்லை என கூறினார்.
இதனையடுத்து, வழக்கின் ஆவணங்களை வழங்க உத்தரவிட்டார். இதனையடுத்து ஆவணங்கள் வழங்கப்பட்டதை அடுத்து நீதிபதி விசாரணையை நவம்பர் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications