கூட்டணி கணக்கு இல்லை.. மாநாடு நடத்துவதற்கு இது மட்டும் தான் காரணம்.. விசிக திருமாவளவன்
சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு முதல்வர் ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்து பேசினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், தேர்தலுக்காக, தேர்தல் அரசியலுக்காக நாங்கள் மாநாடு நடத்தவில்லை. பல தாய்மார்களின் பிரச்சினைக்காக நாங்கள் இந்த மாநாட்டை நடத்துகிறோம் என்று கூறினார்.
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் திமுகவுடனே கூட்டணி அமைத்து விசிக 2 தொகுதியில் போட்டியிட்டது. 2 தொகுதியிலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் வரும் 2 ஆம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடத்துவதாக விசிக தலைவர் தொல் திருமாவளவன் கூறினார்.

மேலும் இந்த மாநாட்டில் பாஜக, பாமகவை தவிர மற்ற அனைத்து கட்சிகளும் பங்கேற்கலாம் என்றார். குறிப்பாக அதிமுகவும் பங்கேற்கலாம் என்று தொல் திருமாவளவன் கூறினார். இதேபோன்று திருமாவளவன் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என முன்பு பேசியிருந்த வீடியோவை பதிவிட்டார். பின்னர் அழித்துவிட்டு மீண்டும் இந்த வீடியோவை பதிவிட்டார். இதனால் திமுக - விசிக கூட்டணியில் விரிசல் ஏற்பட போவதாக கூறப்பட்டது.
இத்தகைய பரபரப்பான சூழலில் தான் இன்று முதல்வர் ஸ்டாலினை இன்று திருமாவளவன் சந்தித்து பேசினார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது:- மாநாட்டினுடைய முதன்மையான நோக்கம் இரண்டு தான். ஒன்று தமிழகத்தில் அரசு மதுபானக்கடைகளை படிப்படியாக குறைத்திட வேண்டும். இரண்டாவது தேசிய கொள்கையை வரையறுக்க அனைத்து கட்சியினரும் ஒருங்கிணைந்து குரல் எழுப்ப வேண்டும். திமுகவுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இந்த வேண்டுகோளை வைக்கிறோம்.
இந்திய ஒன்றிய அரசு அரசமைப்பு சட்டம் 47 ஷரத்தின் படி தேசிய மதுவிலக்கு கொள்கையை உருவாக்கி தனிச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் என்று திமுகவும் சேர்ந்து வலியுறுத்த வேண்டும் என்பது எங்களுடைய வேண்டுகோள். இது தொடர்பாக பேசுவதற்கு தான் இப்போது முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச இருக்கிறேன். மாநாடு தொடர்பாகவும் பேசுவேன். மாநாட்டில் பங்கேற்பதற்காக ஸ்டாலினை நேரில் அழைப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது செய்தியாளர்கள் திமுக - விசிக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி வருவது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த திருமாவளவன், "ஊடகங்கள் தான் இதை ஊதிப் பெருக்குகின்றன. இதனால் எங்க தோழர்களுக்கு ஒரு நம்பிக்கை கொடுத்தேன். தேர்தலுக்காக, தேர்தல் அரசியலுக்காக நாங்கள் மாநாடு நடத்தவில்லை. நம் தாய்மார்களின் எண்ணத்தை நிறைவேற்றவே இந்த மாநாடை நடத்துகிறோம்.
கூட்டணிக்காக இந்த கணக்கை போடவில்லை. கூட்டணியில் விரிசல் ஏற்பட்டால் கூட அதை எதிர்கொள்ள வேண்டும் நாம். ஆனால் நாம் இந்த நோக்கத்தில் உறுதியாக இருக்க வேண்டும் என்று சொன்னேன் நான். இப்போது நான் ஸ்டாலினை பார்க்க போவதற்கு காரணம் தேசிய கொள்கைக்கு திமுக ஆதரவு வழங்க வேண்டும் என்பது தான். மற்றதை முதல்வரை சந்தித்துவிட்டு கூறுகிறேன்" என்றார்.
தொடர்ந்து காலை 11 மணிக்கு ஸ்டாலினை சந்தித்து பேசிய திருமாவளவன் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்தார். அப்போது ஸ்டாலின் திமுக கொள்கை தான் மது விலக்கு கொள்ளை என்று கூறினார். மேலும் பூரண மதுவிலக்கில் உள்ள சிக்கல்களை எடுத்துரைத்தார். இந்த மாநாட்டில் திமுக சார்பில் ஆர் எஸ் பாரதி கலந்துகொள்வார் என்று உறுதியளித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், திமுக விசிக கூட்டணியில் எந்த ஒரு விரிசலும் இல்லை. யாரெல்லாம் மதுவிலக்கில் உறுதியாக உள்ளார்களோ அவர்கள் எல்லாம் ஒன்றிணையவேண்டும் என்பதே எங்களது அறைகூவல். மது ஒழிப்பு மாநாடுக்கு அழைப்பு விடுக்கவே ஸ்டாலினுடன் சந்திப்பு நடைபெற்றது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications