அதிமுக கூட்டத்தில் சிவி சண்முகம் அடிக்க பாய்ந்தாரா?.. அன்வர் ராஜா வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்
சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் என்னை தாக்கவில்லை என முன்னாள் எம்பி அன்வர்ராஜா தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அன்வர்ராஜா எம்ஜிஆர் காலத்திலிருந்து அரசியல்வாதியாக இருந்து வருகிறார். இவர் முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்பியாகவும் இருந்துள்ளார்.
தற்போது அதிமுகவில் சிறுபான்மைப் பிரிவு மாநிலச் செயலாளராக இருந்து வருகிறார். இவர் ஜெயலலிதாவின் விசுவாசியாகவும் இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா பக்கம் இருந்த இவர், அவர் சிறைக்கு சென்ற பிறகு எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளராக செயல்பட்டார்.

வாய்ப்பு
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. சசிகலா அதிமுகவுக்கு தேவையா என்ற விவாதத்தில் இவர் இதுவரை எந்த நிலைப்பாட்டையும் முன் வைக்கவில்லை. எனினும் கடந்த அக்டோபர் மாதம் மதுரையில் சசிகலா குறித்து ஓபிஎஸ் கூறிய கருத்தை வரவேற்றார் அன்வர்.

அன்வர் ராஜா
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை அன்வர் ராஜா விமர்சிக்கும் வகையில் ஒரு ஆடியோ ரிலீஸாகி பரபரப்பை கிளப்பியது. அதில் சட்டசபை தேர்தலில் அதிமுக ஆட்சியை தக்க வைத்திருந்தார் எடப்பாடி தன்னை புரட்சித் தலைவர் என்றே சொல்லியிருப்பார் என விமர்சனம் செய்திருந்தார். இதில் அவர் எடப்பாடி பழனிச்சாமியை ஒருமையில் பேசிவிட்டதாகவும் ஒரு சர்ச்சை எழுந்தது.

ராயப்பேட்டை
இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அன்வர் ராஜா, தற்போது அதிமுக வலுவில்லாமல் உள்ளது. அதனை வலுப்படுத்த சசிகலாவை கட்சியில் சேர்க்கலாம் என்றார்.

நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு
இதற்கு மற்ற நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அன்வர் ராஜாவை பாய்ந்து கொண்டு தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் புதிய தலைமுறைக்கு அன்வர்ராஜா பேட்டி அளித்தார். அதில் எடப்பாடி பழனிச்சாமியை நான் ஒருமையில் பேசிய ஆடியோ வெளியானதை வைத்து சிலர் பிரச்சினையை கிளப்பினர்.

பூதாகரமாக வெடித்தது
இந்த விவகாரம் வெளிவந்த உடனே நான் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து விளக்கினேன். அவரும் பரவாயில்லை என சாதாரணமாக எடுத்துக் கொண்டார். அவரே சாதாரணமாக எடுத்துக் கொண்ட நிலையில் இவர்கள் எல்லாம் அதை பூதாகரமாக முயன்றனர். என்னை அந்த கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்றெல்லாம் பேசினார்.

தாக்கவில்லை
என்னை பேசவிடாமல் சிவி சண்முகம் தடுத்து என்னை வெளியே போக சொன்னது உண்மைதான். ஆனால் அவர் என்னை தாக்க முற்பட்டார் என செய்திகளில் வந்ததெல்லாம் பொய். அவர் கோபத்துடன் பேசியதை பார்க்கும் போது அவர் என்னை தாக்க வருவது போல் தெரிந்துவிட்டது. மற்றபடி அவரது தந்தையும் நானும் நண்பர்கள், அவரும் நானும், அவரது மகனும் நானும் நல்ல பழக்கத்தில் இருக்கிறோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications