பட்டுனு சொல்லிட்டாரே வேல்முருகன்! எந்த மாநில அரசாலும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியாதாம்!
சென்னை: திமுக அரசால் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள எந்த மாநில அரசாலும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறமுடியாது என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று குறிப்பிட்டிருந்தது. நீட்டை ரத்து செய்வோம் என்றார்களே செய்தார்களா என அதிமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. குறிப்பாக, உதயநிதி ஸ்டாலின், நீட் விலக்கு பெறும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து சரமாரியாக விமர்சித்தன.

இந்நிலையில், திமுக இளைஞரணி, மாணவர் அணி, மருத்துவ அணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கையெழுத்து இயக்கம் கடந்த அக்டோபர் 21-ம்தேதி சென்னையில் தொடங்கப்பட்டது. இதன் தொடக்க நிகழ்வில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது கையெழுத்தையும் பதிவு செய்தார். அதன்படி 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துகளைப் பெறும் வகையில் இந்த இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்பிறகு குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது.
எனினும், திமுகவின் இந்த நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கம் வெறும் நாடகம் என்றும், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் நீட்டை ஒழிக்க முயற்சிப்பது போல பாசாங்கு செய்து மக்களை ஏமாற்றுகிறது திமுக என்றும், நீட்டை கொண்டு வந்ததே காங்கிரஸ் கட்சியும், திமுகவும் தான் என்றும் எடப்பாடி பழனிசாமி காட்டமாக விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில், திமுக கூட்டணியில் இருக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் திமுகவின் 'உதயசூரியன்' சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவருமான வேல்முருகன் எம்.எல்.ஏவும், திமுக அரசால் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியாது எனக் கூறியுள்ளார். இதுதொடர்பாக செய்தி ஊடகம் ஒன்றிடம் பேசியுள்ள வேல்முருகன், இதனை தெரிவித்துள்ளார்.
திமுக அரசால் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள எந்த மாநில அரசாலும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறமுடியாது. ஏனென்றால் மத்திய அரசு நீட் தேர்வு தேவை என்பதில் மிக உறுதியாக இருக்கிறது. நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் ஒப்புதல் கிடைத்தால்தான் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முடியும். அது இப்போதைய மத்திய அரசு இருக்கும்வரை நடக்காது எனத் தெரிவித்துள்ளார் வேல்முருகன்.
நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் போன்ற நடவடிக்கைகளின் மூலம் அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்க மட்டுமே முடியும். அதனால்தான் திமுக அதைச் செய்கிறது. ஆனால், மத்திய பாஜக அரசு நீட் தேர்வு விஷயத்தில் உறுதியாக இருக்கிறது. எனவே, நீட் தேர்வில் விலக்கு பெறுவது இயலாத காரியம் எனக் கூறியுள்ளார் வேல்முருகன்.












Click it and Unblock the Notifications