என்னை மிரட்டி ஊரை விட்டு போக சொன்னார்கள்.. அமலாக்கத் துறை மீது சபாநாயகர் அப்பாவு பகீர்
சென்னை: எனக்கும் 3 மாதங்களாக அமலாக்கத் துறையின் இடைத்தரகர்களின் மூலம் மிரட்டல் வந்தது என தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு பகீர் தகவலை சொல்லியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் அரசு மருத்துவரை மிரட்டிய அமலாக்கத் துறை அதிகாரி கைது செய்யப்பட்டதன் மூலம் என்ன தெரிகிறது என்றால் மத்திய புலனாய்வு அமைப்புகளான அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சிபிஐ போன்றவை மத்திய அரசின் மனநிலையை தெரிந்து கொண்டுள்ளார்கள்.

அவர்கள் பாஜக ஆட்சி அல்லாத மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் எல்லாம் குறி வைத்து அவர்களுக்கு முதலில் நூல் விடுவார்கள். எப்படி நூல் விடுவாங்கன்னா, உங்கள் மேல் இப்படியெல்லாம் பிரச்சினை இருக்கிறது. நடவடிக்கை எடுக்க தயாராக இருந்த போதிலும் எனக்கு வேண்டிய ஆள் என நான் அவர்களை எல்லாம் சமாதானப்படுத்தி வைத்துள்ளேன்.
உங்களுக்கு எந்த பிரச்சினையையும் வந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுமாறு சொல்லியிருக்கேன், அப்படி இப்படி என ஒவ்வொன்றாக சொல்வார்கள். இந்த அமைப்புகளுக்கு இடைத்தரகர்களாக பலர் இருப்பார்கள். அவர்களை வைத்து அமலாக்கத் துறை மிரட்டி சம்பந்தப்பட்டவர்களிடம் குறிப்பிட்ட தொகையை வாங்கிக் கொள்வார்கள்.
இது போல் எல்லோருக்குமே அன்பாக பேசுவது போல் பேசி, பின்னர் டோனை உயர்த்தி மிரட்டல் விடுப்பார்கள். இதைத் தாண்டி அடுத்த கட்டமாக சமாதானமாக பேசுவார்கள். சமாதானத்தில் உடன்பணியாவிட்டால் நோட்டீஸ் அனுப்புவார்கள். இப்படிப்பட்ட செயல்தான் அதிகமாக நடப்பதாக பலர் சொல்லியுள்ளார்கள்.
எனக்கு வேடிக்கையாக இருக்கிறது என்னிடம் கூட 3 மாதங்களாக சிலர் பேசிக் கொண்டே வந்தனர். நான் காது கொடுத்தே கேட்கவில்லை, ஒரு முறை இரண்டு முறை வந்தது, 3ஆவது முறை வந்த போது, நான் சரியா இருக்கேன், என் மேல தவறு என்றால் எனக்கு மேல இருக்கிறவர் பார்த்துக்குவார். விவசாயம் செய்து முன்னுக்கு வரும் என்கிட்டயே மிரட்டுறீங்களா என கேட்டேன்.
ஊரை விட்டு போகச் சொன்னார்கள், செல்போன் எண்ணை மாற்றச் சொன்னார்கள். என்னை போன்று எல்லோருக்கும் ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளின் இடைத்தரகர்களின் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இவ்வாறு அப்பாவு தெரிவித்துள்ளார்.
பின்னணி என்ன: திண்டுக்கல் நியூ அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த அரசு மருத்துவர் சுரேஷ் பாபு. இவர் மீது சொத்து குவிப்பு வழக்கை விசாரிக்காமல இருக்க ரூ 3 கோடி கேட்டு மிரட்டி ரூ 20 லட்சத்தை வாங்கிவிட்டு அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி தப்பினார்.
15 கி.மீ. தூரம் விரட்டி சென்று தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் சுமார் 15 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் இரவோடு இரவாக திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அங்கித் திவாரியை திண்டுக்கல் சிறையில் அடைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications