தவெக அரசின் அரசிதழ் அறிவிப்பில் அப்பாவு பெயர் ஏன்? ஏற்பட்ட குழப்பம்.. என்ன மேட்டர்?
சென்னை: திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானதாக வெளியிடப்பட்ட அரசிதழில் சட்டப்பேரவை சபாநாயகரின் பெயர் அப்பாவு என குறிப்பிடப்பட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஜேசிடி பிரபாகர், சபாநாயகர் ஆகியுள்ள நிலையில் இன்னும் அப்பாவு பெயரில் அரசிதழில் அறிவிப்பு செய்யப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் முதலமைச்சர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் இரண்டிலும் வெற்றி வாகை சூடினார். அரசியலமைப்பு சட்டப்படி இரண்டு தொகுதிகளில் வெற்றி பெறுபவர்கள் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். அதன்படி, திருச்சி கிழக்கு தொகுதியை தற்போது முதல்வர் விஜய் ராஜினாமா செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து திருச்சி சட்டமன்ற தொகுதி காலியானதாக அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த தொகுதியில் அடுத்த 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். ஆகவே, இந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட அரசிதழில் சபாநாயகர் பெயர் அப்பாவு என இடம்பெற்று இருக்கிறது. இவர், கடந்த திமுக ஆட்சியின் போது சபாநாயகராக இருந்தவர். தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் தற்போது ஜேசிடி பிரபாகர் சபாநாயகராக உள்ளார். முன்னதாக தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்.எல்.ஏ கருப்பையா செயல்பட்டார்.
புதிய அரசில் சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் பொறுப்பேற்ற நிலையில், மே 10 ஆம் தேதியிட்ட அரசிதழில் மு. அப்பாவு பெயர் ஏன் உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சட்டப்படி, சட்டப்பேரவை கலைக்கப்பட்டாலும் புதிய பேரவையின் முதல் அமர்வு நடைபெறும் வரை பழைய சபாநாயகரே பதவியில் தொடர்வார். ஜோசப் விஜய்யின் ராஜினாமாவை சபாநாயகராக அப்பாவு ஏற்றுக்கொண்டார். எனவே, புதிய அரசு அமைவதற்கான முதல் கூட்டத்தொடருக்கு முன் வந்த அறிவிப்பு என்பதால் அப்பாவு பெயர் இடம்பெற்றுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.













Click it and Unblock the Notifications