தமிழக சட்டசபை சபாநாயகராக தேர்வாகிறாரா அப்பாவு?.. நெல்லை மக்களை மகிழ்விக்க ஸ்டாலின் செம வியூகம்!
சென்னை: தமிழக சட்டசபையின் சபாநாயகராக மூத்த தலைவர் அப்பாவு தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
ஸ்டாலின் அமைச்சரவையில் 33 அமைச்சர்கள் நேற்றைய தினம் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் டெல்டா மாவட்டத்திற்கு அமைச்சரே இல்லையே என அப்பகுதி மக்கள் ஆதங்கத்தில் இருந்தனர்.
தமிழக அரசின் தலைமை செயலாளராக இறையன்பு; முதல்வரின் செயலர் உதயச்சந்திரன்... சீமான் பாராட்டு
இதையடுத்து தனது ஒத்தை ட்வீட் மூலம் ஸ்டாலின் மிக அழகாக பதில் அளித்தார். அதாவது காவிரிக் கரையாம் தஞ்சை மண்ணின் - திருவாரூரைச் சார்ந்த எனக்கு சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி! என தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார். இதன் மூலம் டெல்டாவுக்கு அமைச்சர் இல்லாட்டி என்ன, முதல்வரே டெல்டா மாவட்டத்துக்காரர்தான் என சொல்லாமல் சொன்னது போல் இருந்தது.
நெல்லை மாவட்டம்
அது போல் தென் மாவட்டங்களில் முக்கியமானதாக கருதப்படும் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து இந்த முறை அமைச்சர்கள் நியமிக்கப்படாதது அம்மாவட்ட மக்களிடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது. பொதுவாக எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சி காலங்களில் மதுரைக்கு அடுத்தபடியாக நெல்லை மாவட்டத்திலிருந்து ஒருவருக்கு அமைச்சர் பதவியோ சபாநாயகர் பதவியோ வகிப்பது வழக்கம்.
விவசாயிகள்
அந்த வகையில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த அப்பாவுக்கு சபாநாயகர் பதவி அளிக்கப்படலாம் என தெரிகிறது. ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை கடந்த தேர்தலில் 49 வாக்குகளில் இழந்த அப்பாவு இந்த முறை அதே தொகுதியில் போட்டியிட்டு வென்றார். விவசாயிகளின் உரிமைகளுக்காக அப்பாவு பிரச்சாரம் செய்தவர்.
பொருத்தம்
விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலைக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியதன் அவசியம் குறித்து நீதிமன்றத்தில் பேசியுள்ளார். பெப்சி மற்றும் கோகோ கோலா நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றில் இருந்து நீர் எடுப்பதற்கு எதிராக பிரச்சாரம் செய்தார். எனவே இவருக்கு இந்த பதவி பொருத்தமாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.
சபாநாயகர்
அது போல் திருவண்ணாமலை மாவட்டம் , கீழ் பென்னாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற கு பிச்சாண்டிக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்காதது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக சார்பில் 4 முறை சட்டசபைக்கு தேர்வாகியுள்ளார். 1996ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்தார். எனவே இந்த முறை இவருக்கு துணை சபாநாயகர் பதவி கொடுக்கப்படலாம் என தெரிகிறது.
எம்எல்ஏக்கள்
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் மே 11 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் எம்எல்ஏக்களுக்கு இடைக்கால சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். இதையடுத்து எம்எல்ஏக்கள் ஒன்று சேர்ந்து மே 12-ஆம் தேதி சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கான தேர்தலில் வாக்களிப்பர். எனவே அப்பாவுவும், பிச்சாண்டியும் முறையே அப்பதவிகளுக்கு தேர்வு செய்யப்படலாம் என தெரிகிறது. இடைக்கால சபாநாயகராக ஜவாஹிருல்லா தேர்வு செய்யப்படலாம் என்றும் தெரிகிறது.