அவசரமால்லாம் விசாரிக்க முடியாதுங்க.. செந்தில் பாலாஜிக்கு சென்னை ஹைகோர்ட் பதில்
சென்னை: ED விசாரணையை தள்ளி வைக்க கோரிய மனு தள்ளுபடி ஆனதை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பு மேல் முறையீடு செய்த நிலையில், மறு ஆய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. மேலும் வழக்கமான பட்டியலில் பட்டியலிடப்பட்டு மனு விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிறகு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு முதன்மை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில், போக்குவரத்து கழகங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கின் விசாரணை முடிவடையும் வரை, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை தொடங்கக்கூடாது என்றும், இந்த விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி அதே நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ். அல்லி முன்னிலையில் நடந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன் , மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்த வழக்கில் செந்தில் பாலாஜி விடுவிக்கப்படும் பட்சத்தில் அமலாக்கத்துறை வழக்கு செல்லாததாகிவிடும் என வாதாடினார். அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர், 'வழக்கின் விசாரணையை முடக்கி, குற்றச்சாட்டு பதிவையும், சாட்சி விசாரணையையும் தாமதப்படுத்தும் நோக்கில் செந்தில் பாலாஜி தரப்பு மனுவை தாக்கல் செய்துள்ளது.
செந்தில் பாலாஜியின் இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என வாதம் முன்வைத்தார். இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் செந்தில் பாலாஜியின் மனுவை நீதிபதி எஸ். அல்லி தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டார். மேலும் இன்றைய தினம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் எனறும் அதற்காக செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், விசாரணையை தள்ளி வைக்க கோரிய மனு தள்ளுபடி ஆனதை எதிர்த்து செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் முறையிட்டார். எனினும், மறு ஆய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வழக்கமான பட்டியலில் பட்டியலிடப்பட்டு மனு விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் எம்.எஸ் ரமேஸ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது. மறு ஆய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்காவிட்டால் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு விடும் என்ற செந்தில் பாலாஜியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications