அப்சரா ரெட்டி முதலில் ஜெயலலிதாவுக்குதான் நன்றி சொல்லணும்.. ஏன் தெரியுமா?
அப்சரா ரெட்டிக்கு காங்கிரசில் புதிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: முதலில் அப்சரா ரெட்டி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குதான் நன்றி சொல்லணும்!! ஏன் தெரியுமா?
3-ம் பாலினம் என்பதே அவ்வளவாக முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளாத காலகட்டம் அது. இப்போதிருக்கும் முழு சகிப்புத்தன்மை அன்றைய ஜெயலலிதா ஆட்சி காலத்தின்போது குறைவுதான்.
ஆனால் திருநங்கைகளின் நல்வாழ்விற்கு திமுக மகளிரணி செயலாளர் கனிமொழியின் பங்கினை எப்படி மறக்க முடியாதோ, அதுபோலதான் திருநங்கைகளின் விவகாரத்தில் ஜெயலலிதாவின் துணிச்சலையும் மறக்க முடியாது.
டாக்-ஷோ
அப்படி ஒரு தடாலடி முடிவெடுத்து, தன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை நடத்த அப்சரா ரெட்டியை அனுமதித்தவர் ஜெயலலிதாதான். ஏற்கனவே ஒரு தொலைக்காட்சியில் அப்சரா நிகழ்ச்சியை நடத்தி வந்தாலும், ஜெயா டிவியின் டாக்-ஷோதான் பெருமளவு பேசப்பட்டது. அதுபோலவே, அப்சரா ரெட்டிக்கு ஜெயலலிதா மீது தனி ஈர்ப்பும், மரியாதையும் இருந்தது.
கிருஷ்ணபிரியா
அதனால்தான் ஜெயலலிதா முன்னணியில் கட்சியிலும் தன்னை இணைத்து கொண்டார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுக கட்சி இரண்டாகப் பிரிந்தபோது அவர், தினகரன் அணியில் இருந்தார். அதாவது சசிகலா குடும்பத்துடன், இன்னும் சொல்லப்போனால் கிருஷ்ணபிரியாவின் நெருக்கமான தோழி என்று கருதப்பட்டார்.
லண்டன் படிப்பு
தினகரனுடன் மனக்கசப்பு ஏற்பட்டதாகவும், அதனால் அக்கட்சியிலிருந்து வெளியேறி கொஞ்ச நாள் எந்த கட்சிக்கும் போகாமல், ஓய்வில் இருந்துவிட்டு இப்போது காங்கிரசுக்கு வந்ததாக சொல்லப்படுகிறது. லண்டனில் படித்திருந்தாலும் அப்சரா ஒரு கட்சியையும் விட்டு வைக்கவில்லை போலும். முதலில் கடந்த 2016ல் பாஜகவில் இணைந்தார். பிறகு அதே ஆண்டு அதிமுக, அதன்பிறகு தினகரன் தரப்பு, இப்போது காங்கிரஸ் என ஒரு ரவுண்டு அடித்து விட்டார்.
ஆச்சரியம்-மகிழ்ச்சி
ஆனால் ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக பாராட்ட வேண்டியது ராகுல் காந்தியைதான். வரும் எம்பி தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி மும்முரத்தையும், தீவிரத்தையும் கையாண்டு வருவது தெரிந்த சங்கதி என்றாலும், மகளிர் அணியான மகிளா காங்கிரஸின் தேசியப் பொதுச் செயலாளர் என்ற மிக முக்கிய பொறுப்பை அப்சராவுக்கு ராகுல் தந்திருப்பது உண்மையிலேயே ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் தந்திருக்கிறது.
ரொம்பவே நெருக்கம்
இந்த பதவிக்கு அப்சரா மிக பொருத்தமானவர்தான். ஏனெனில் ஆங்கிலப் பத்திரிகைகளின் சென்னைப் பதிப்பின் இணைப்பு இதழ்களுக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார் அப்சரா. அது மட்டுமில்லை... சினிமா நட்சத்திரங்கள் பெரும்பாலானோருக்கு அப்சரா ரொம்பவே நெருக்கமான தோழி.
நாட்டுக்கே பெருமை
பொதுமக்களால் நன்கு டிவி மூலம் அறியப்பட்டவரும்கூட. அதனால் இந்த பொறுப்பு அப்சராவுக்கு பொருத்தமானதாகவே பார்க்கப்படுகிறது. அதுவும் இல்லாமல், 134 ஆண்டுகள் பழமை வாய்ந்த மகிளா காங்கிரஸின் முதல் திருநங்கை என்ற பெருமையையும் அப்சரா பெற்றிருப்பது, ஒட்டுமொத்த நாட்டுக்கே பெருமையாக உள்ளது.