இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தாயார் கரீமா பேகம் காலமானார்... மகன் வளர்ச்சியில் அரும்பங்காற்றிய அன்னை..!
சென்னை: இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான் இன்று உலகம் போற்றும் உன்னத கலைஞராக உருவெடுத்திருக்கிறார்.
சிறுவயதிலேயே தந்தையை இழந்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அவரது தாயார் கரீமா பேகம் தான் முழு முதற் துணையாக நின்றார்.

பக்கபலம்
ஏ.ஆர்.ரஹ்மானின் ஆரம்பக்கால வளர்ச்சியில் அரும் பங்காற்றியவர் அவரது அம்மா கரீமா பேகம் என்று சொன்னால் அது மிகையாகாது. ரஹ்மானின் தந்தை இறந்த தருணத்தில் குடும்பத்தில் பெரியளவு வருமானம் இல்லாத சூழலிலும் ஏ.ஆர். ரஹ்மான் அவரது விருப்பம் போல் இசையமைப்பாளராக பக்கபலமாக நின்றார் கரீமா பேகம்.

பரிவும், பாசமும்
நபிகள் நாயகத்தின் போதனைகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது என்றால் அது ''தாயின் காலடியில் தான் சொர்க்கம் உள்ளது'' என்பதாகும். அன்னைக்கு பணிவிடை செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி நபிகளார் கூறிய அமுத மொழிக்கேற்ப ஏ.ஆர்.ரஹ்மான் தனது தாயாரிடம் மிகுந்த பரிவும், பாசமும் காட்டி வந்தார்.

முக மலர்ச்சி
தாயார் கரீமா பேகத்தை பல முறை ஹஜ் செய்வதற்காக மெக்காவுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். தனக்கு ஆயிரம் நெருக்கடிகளும், பணிச்சுமையும் இருப்பினும் கூட தாயின் முகத்தை கண்டபோதெல்லாம் முக மலர்ச்சி கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். இதனிடையே வயது மூப்பு காரணமாக, கரீமா பேகத்துக்கு கடந்த சில மாதங்களாகவே அவ்வப்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது.

நல்லடக்கம்
இதற்கான சிகிச்சைகளை ஏ.ஆர்.ரஹ்மானின் குடும்ப மருத்துவர்கள் அளித்துள்ளனர். இருப்பினும் இயற்கையை வெல்ல யாரால் முடியும் என்பதற்கேற்ப ரஹ்மானின் தாயார் கரீமா பேகத்தின் உயிர் இன்று காலை பிரிந்தது. அவரது இறுதிச்சடங்கு இஸ்லாமிய முறைப்படி மேற்கொள்ளப்பட்டு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications