சென்னை வெள்ளம்! திருப்புகழ் ஐஏஎஸ் அறிக்கை என்ன ரகசிய ஆவணமா? முதல்வருக்கு அறப்போர் இயக்கம் கேள்வி
சென்னை: திருப்புகழ் கமிட்டி அறிக்கையை எதுக்கு ஒளித்து வைத்துள்ளீர்கள் என முதல்வர் ஸ்டாலினுக்கு அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னையில் மழை வெள்ள பாதிப்பை தடுக்க திருப்புகழ் ஐஏஎஸ் தலைமையில் 14 பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த குழுவின் எந்த பரிந்துரையையும் தமிழக அரசு செயல்படுத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருப்புகழ் குழுவின் இறுதி அறிக்கை செயல்படுத்தப்பட்டதாக கூறும் நிலையில் அந்த அறிக்கையில் என்னென்ன பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன என்பது கூட மக்களுக்கு தெரியாது என சொல்லப்படுகிறது.
அது போல் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதியே திருப்புகழ் குழுவின் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 10 மாதங்களாகியும் அந்த அறிக்கையை தமிழக அரசு வெளியிடவில்லை. இது குறித்து வெள்ள அறிக்கை தேவை என பலர் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
திருப்புகழ் குழுவில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகள் எத்தனை? அவற்றில் செயல்படுத்தலாம் என தமிழக அரசு ஏற்றுக் கொண்ட பரிந்துரைகள் எத்தனை? அவற்றில் செயல்படுத்தப்பட்ட பரிந்துரைகள் எத்தனை? என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய நடவடிக்கை அறிக்கையையும் தமிழக அரசு வெளியிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் சென்னை மிக்ஜாம் புயலின் போது ஏற்பட்ட வெள்ள பாதிப்பை திறம்பட பணியாற்றியது குறித்து மத்திய குழு தமிழக அரசை பாராட்டியதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் தி இந்து குழுமத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
திருப்புகழ் கமிட்டி அறிக்கையை எதுக்கு ஐயா ஒழித்து வைத்துள்ளீர்கள். இணையதளத்தில் வெளியிடுங்கள். மக்கள் பார்க்கட்டும். அது ஒண்ணும் ரகசிய ஆவணம் இல்லையே..! @CMOTamilnadu @Chief_Secy_TN #Arappor https://t.co/Qj5Hs9dfKt
— Arappor Iyakkam (@Arappor) December 17, 2023
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திருப்புகழ் அவர்களின் தலைமையிலான கமிட்டி அறிக்கையின் அடிப்படையில், பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அவற்றின் தற்போதைய நிலை ஆகியவற்றைத் தொகுத்து விரைவில் பொதுவெளியில் வெளியிட உள்ளோம்.
அதேபோல், இரண்டரை ஆண்டுக்காலத்தில் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்கப்பட்ட வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள், அதற்கான செலவினம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வெகுவிரைவில் உங்களின் தகவலுக்காக வெளியிட உள்ளோம். நாங்கள் வெளிப்படையான ஆட்சியை நடத்தி வருகிறோம் என நிறைய விஷயங்களை முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
இதுகுறித்து அறப்போர் இயக்கம் கூறியிருப்பதாவது: திருப்புகழ் கமிட்டி அறிக்கையை எதுக்கு ஐயா ஒழித்து வைத்துள்ளீர்கள். இணையதளத்தில் வெளியிடுங்கள். மக்கள் பார்க்கட்டும். அது ஒண்ணும் ரகசிய ஆவணம் இல்லையே.. என தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications