மோடியின் நண்பர்.. அதானியை காக்க திமுக அரசு திட்டமா? நிலக்கரி ஊழல் குறித்து அறப்போர் இயக்கம் கேள்வி
சென்னை: நிலக்கரி கொள்முதல் ஊழலில் அதானியை காப்பாற்ற திமுக அரசு திட்டமிடுகிறதா என அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பி உள்ளது.
இதுகுறித்து அறப்போர் இயக்கம் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளதாவது, "தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 2012 முதல் 2016 வரை 2.44 கோடி மெட்ரிக் டன் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் ரூ.6066 கோடி அளவிற்கு ஊழல் நடந்தது என்று அறப்போர் இயக்கம் 2018 இல் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் கொடுத்தது.

மிக முக்கியமாக பாதிக்கு பாதி நிலக்கரி இறக்குமதி அதாவது 1.19 கோடி மெட்ரிக் டன் அதானியால் மட்டும் இறக்குமதி செய்யப்பட்டு கிட்டத்தட்ட 3000 கோடி ஊழல் அதானி நிறுவனம் செய்தது. ஒரே மாதத்தில் வாங்கப்பட்ட ஒரே தரம் நிலக்கரிக்கு TNPL கொள்முதல் விலையை விடவும், அதே போல் சந்தை மதிப்பை விடவும் அதானி மற்றும் சிலரிடம் இருந்து எப்படி ஒரு மெட்ரிக் டன்னுக்கு $20 அதிகமாக மின்சார வாரியம் கொள்முதல் செய்தது என்பதற்கான ஆதாரங்களை அறப்போர் சமர்பித்து உள்ளது.
ஒரு சிலர் மட்டும் பங்கெடுக்கும் வண்ணம் டெண்டர் விதிகளை எப்படி மின்சார வாரியம் மாற்றியது என்பதற்கான ஆதாரங்களும் தரமில்லாத நிலக்கரி கொண்டு வந்ததை CAG கண்டுபிடித்த ஆதாரங்களும் சமர்பிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் அதானி மீது நடவடிக்கை எடுக்க பயந்தார்கள். FIR போடப்படவில்லை. திமுக ஆட்சி வந்தவுடன் கடந்த 2 ஆண்டுகளாக அறப்போர் இயக்கம் தொடர்ந்து கடிதம் அனுப்பியதால் விசாரணையை துவங்க லஞ்ச ஒழிப்பு துறை ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 17 கீழ் அரசிடம் அனுமதி கோரி உள்ளது. சட்டப்படி 3 மாதத்திற்குள் கொடுக்க வேண்டிய அனுமதியை 7 மாதங்கள் ஆகியும் தராமல் திமுக அரசு இழுத்தடிக்கிறது. அதானியை காப்பாற்ற திமுக அரசில் யார் முயற்சி செய்கிறார்கள்?
அதானியின் நண்பர் பிரதமர் மோடி என்பதால் தயக்கமா? இந்த புகாரில் அப்போதைய அதிகாரிகள், அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அதானி மற்றும் மற்றவர்கள் மீது உடனடியாக FIR பதிவு செய்யப்பட வேண்டும் . முதல்வர் ஸ்டாலின் அவர்கள் விளக்கம் தருவாரா? உடனடியாக விசாரணை நடத்த அனுமதி தருமா தமிழ்நாடு அரசு?" என்று குறிப்பிட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications