செந்தில்பாலாஜியின் வேட்புமனுவை நிராகரிக்க கோரிய வழக்கு தள்ளுபடி.. மனுதாரருக்கு ரூ. 30,000 அபராதம்
சென்னை: அரவக்குறிச்சி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியின் வேட்புமனுவை நிராகரிக்க உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தின் பிரதான கட்சிகள் அத்தொகுதியில் போட்டியிடும் தத்தம் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இத்தொகுதியில் போட்டியிட திமுக சார்பில் முன்னாள் அமைச்சரான செந்தில்பாலாஜி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இதனையடுத்து அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் அதிகாரி மீனாட்சியிடம் அண்மையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த கீதா என்பவர், செந்தில் பாலாஜியின் மனுவை, தேர்தல் ஆணையம் ஏற்க கூடாது என உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அவரின் ஊழல் நடவடிக்கைகளால்தான் கடந்த முறை அரவக்குறிச்சி தொகுதிக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இதனை கருத்தில் கொண்டு தற்போது அதே தொகுதியில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்துள்ள, செந்தில் பாலாஜியின் வேட்புமனுவை ஏற்கக் கூடாது. அவ்வாறு அவரை போட்டியிட அனுமதித்தால் அது தவறான முன்னுதாரணமாகி விடும் என கூறியிருந்தார்.
இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த 2016-ம் ஆண்டும் இதே கோரிக்கையுடன் நீங்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளீர்கள். அந்த விஷயத்தை மறைத்து தற்போது இதை புதிய வழக்காக தொடர்ந்து, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்துள்ளீர்கள் என கண்டனம் தெரிவித்தது.
நீங்கள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக ரூ. 30,000 அபராதம் விதிக்கப்படுகிறது. அடுத்த 15 நாட்களில் இந்த தொகையை சிறார் நீதி நிதியத்துக்கு செலுத்த வேண்டும் என கீதாவுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது ஐகோர்ட்.












Click it and Unblock the Notifications