கிழி.. கிழி.. ஆமா கலா மாஸ்டர், ரஞ்சித்.. இவங்கெல்லாம் அமமுகவில்தான் இன்னும் இருக்காங்களா!
அமமுகவில் உள்ள மற்ற நிர்வாகிகள், உறுப்பினர்களின் நிலைப்பாடு தெரியவில்லை
சென்னை: அமமுக என்னும் கூட்டுக்குள் இருந்து ஒவ்வொரு பறவையாக பறந்து வெளியே வந்து கொண்டிருக்கின்றன. இப்படி கூடாரம் காலியாகி கொண்டிருக்கும் நிலையில், அமமுகவை நம்பி உள்ள மற்றவர்களின் நிலைப்பாடு, கருத்து என்னவென்று தெரியாமலேயே உள்ளது.
அசுர வேகத்தில் வளர்ந்தவர் டிடிவி தினகரன்.. எத்தனையோ பிரச்சனைகள், பஞ்சாயத்துகள் வந்தபோதும் கூல் அரசியல்வாதி என்ற பெயரை பெற்றவர்.
சசிகலா குடும்பத்தினர் மீது ஒட்டுமொத்த தமிழகமும் கோபத்தில் இருந்தபோது அழகாக அதிலிருந்து தன்னைத் தனித்துக் காட்டி குறுகிய காலத்தில் ஒரு கட்சித் தலைவராக தன்னை மாற்றிக் கொண்டவர்.

கூல் தலைவர்
தன்னுடைய அசால்ட்டான & டென்ஷன் இல்லாத பேச்சினால் மக்கள் கவனத்தை திசை திருப்பி கொண்டார். இவர் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கூட கணிக்கப்பட்டது. ஆனால் என்ன நடந்ததோ, என்ன ஆனதோ பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளார் தினகரன். எந்த வேகத்தில் எழுந்தாரோ அதே வேகத்திலேயே என்னமோ யார் மனசிலும் ஒட்டாமலேயே போய்விட்டார்.

ரஞ்சித்
அதையும் மீறி சிலர் தினகரனால் ஈர்க்கப்பட்டனர். குறிப்பாக பாமகவிலிருந்து ரஞ்சித் அமமுகவில் இணைந்தார். இதற்கு ரஞ்சித் சொன்ன காரணம், "இளைஞர்கள் எதிர்ப்பார்க்கும் தலைவர், நல்ல தலைமை தேவை என்பதால் தினகரன் கட்சியில் இணைந்தேன். சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட தலைவரை தேர்வு செய்துள்ளேன்" என்றார். ஆனால் ரஞ்சித் தேர்தலின்போது என்ன செய்தார், இப்போது அவரது மனநிலை என்னவென்று தெரியவில்லை.
|
பிரச்சாரம்
அதேபோல, கடந்த மார்ச் 23-ம் தேதி "என் அரசியல் பிரவேசம் திரு.TTV தினகரன் அவர்களின் தலைமையில் இனிதே தொடங்குகிறது" என்று டான்ஸ் மாஸ்டர் கலா ஒரு ட்வீட் போட்டு அமமுகவில் இணைந்தார். அக்கட்சிக்காக பிரச்சாரம் மேற்கொண்டதை தவிர பெரிசா வேறு எதுவும் தெரியவில்லை.

பாடகர் மனோ
கடந்த மார்ச் 9-ம் தேதி பாடகர் மனோ, திடுதிப்பென்று தினகரன் முன்னிலையில் அமமுக கட்சியில் இணைந்தார். இவர் ஏன் இணைந்தார், இணைந்த பிறகு என்ன செய்தார் என்று இதுவரை தெரியவில்லை.

விலகல் தொடருமா?
இன்று அமமுகவுக்கு ஆபீஸ் கொடுத்தவரே அதிமுகவுக்கு செல்லும் நிலை வந்துவிட்ட நிலையில், தினகரனால் கவரப்பட்டு, அவரை நம்பி அக்கட்சிக்கு போனவர்கள் நிலை என்னாகுமோ தெரியவில்லை. முக்கியமாக, சிஆர் சரஸ்வதி என்ன செய்யபோகிறார் என்ற கேள்விதான் நிறைய நமக்கு எழுகிறது. இவர்களும் படிப்படியாக விலகுவார்களா அல்லது என்ன நடந்தாலும் சரி.. எங்கள் வாழ்வு தினகரனுடன்தான் என்று கூடவே இருப்பார்களா.. ரஜினி பாணியில் சொல்வதானால்.. காலம் பேசாது.. ஆனால் காலம் தான் பதில் சொல்லும்.!












Click it and Unblock the Notifications