ஓஹோ.. திமுக வரலாற்றையே மாற்றியமைக்கிறாரா ஸ்டாலின்? இதுதான் அந்த "மூன்று முடிச்சு" ஸ்டேடர்ஜி.. பலே
சென்னை: திமுகவை பொறுத்தவரை நான்கு விதமான சவால்களை சமாளிக்க இப்போதே வியூகங்களை வகுக்க துவங்கியிருக்கிறதாம்.. என்ன காரணம்? திமுகவில் என்ன நடக்கிறது?
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின் வெற்றியை தக்கவைக்கும் மிகப்பெரிய பொறுப்பு திமுகவுக்கு ஏற்பட்டிருக்கிறது.. அத்துடன், திமுக அரசு மீது எழுந்துவரும் அதிருப்திகளை களைந்து, வாக்குகளை பெருவாரியாக அள்ள வேண்டும் என்ற கட்டாயமும் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக, வரப்போகும் சட்டமன்ற தேர்தல் குறித்த பணிகளில் திமுக இப்போதே கவனம் செலுத்த துவங்கிவிட்டது..

வியூகங்கள்: 2026 சட்டசபை பொதுத்தேர்தலிலும் பெற வேண்டும் என்பதற்காக முதல்வர் ஸ்டாலின் வியூகம் வகுத்து வருவதாகவும் தெரிகிறது.. இதற்காகவே திமுகவில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை அமைத்துள்ளார்.
இந்த குழுவில் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். திமுகவில் அடுத்து என்னென்ன மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து கட்சித் தலைவருக்கு, இந்த குழுவினர் பரிந்துரை செய்ய போகிறார்கள்.
பொறுப்புகள்: அதாவது, இளைஞர் அணி செயலாளராக உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என தகவல்கள் றெக்கைக் கட்டி பறந்துவரும் நிலையில், சட்டப்பேரவை தேர்தலை ஒருங்கிணைக்கும் பணியும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. எனவே, லோக்சபா தேர்தலைவிட, வரப்போகும் தேர்தலில் உதயநிதிக்கான முக்கியத்துவமும், பங்களிப்பும் சற்று கூடுதலாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், அதிமுக, பாஜக, தமிழக வெற்றிக்கழகம் என 3 வகையான நெருக்கடிகளையும் திமுக சமாளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.. கடந்த 2 மாதமாகவே, எடப்பாடி பழனிசாமியின் வேகமும், செயல்பாடும் அதிகரித்து காணப்படுகிறது. வரும் தேர்தலில் மிகப்பெரிய கூட்டணி அமைத்து போட்டியிட போவதாக, நிர்வாகிகளிடம் உறுதி தந்திருக்கிறாராம் எடப்பாடி..
வாக்குகள்: அதுமட்டுமல்ல, சிறுபான்மையினர் வாக்குகளை அதிமுக பக்கம் திருப்புவதற்கான வேலைகளில் இறங்குங்கள் என்று அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் உத்தரவு பிறப்பித்திருக்கிறாராம். சிறுபான்மையினர் ஓட்டுக்கள்தான் திமுகவுக்கு தற்போதுவரை பலமாக இருந்து வரும்நிலையில், எடப்பாடியின் இந்த முயற்சியை முறியடிக்க வேண்டிய கட்டாயமும் திமுகவுக்கு உள்ளது.
அதேபோல, லோக்சபா தேர்தலில் கொங்கு உள்ளிட்ட பகுதிகளில் அதிமுகவின் வாக்குகளை பெருவாரியாக பாஜக பெற்றிருப்பது, திமுகவுக்கே சற்று அதிர்ச்சிதானாம். கொங்குவில் தற்போது பலம்பொருந்தி திமுக இருந்தாலும்கூட, அதிமுக, பாஜகவுக்கான வாக்குகளை அள்ளுவதற்கான வேலைகளில் இறங்க வேண்டிய சூழ்நிலையும் திமுகவுக்கு வந்துள்ளதாம்.
நடிகர் விஜய்: வரும் சட்டப்பேரவை தேர்தலில் களமிறங்க உள்ளதாக நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் தெரிவித்துள்ளதால், அக்கட்சிக்கான வாய்ப்புகள் என்ன என்பதையும் திமுக ஆராய வேண்டியிருக்கிறது.. ஒருவேளை விஜய்யுடன் அதிமுக கைகோர்க்க நேர்ந்து விட்டாலோ அல்லது விஜய்யும், சீமானும் ஒன்று சேர்ந்துவிட்டாலோ, திமுகவின் வாக்கு வங்கியில் கடுகளவு கூட, சரிவு ஏற்படாதவாறு, அந்த வியூகத்தையும் முறியடிக்க வேண்டிய தேவை திமுகவுக்கு எழுந்துள்ளது.
ஆகமொத்தம், இந்த 3 கட்சிகள் குறித்தே, தீவிர ஆலோசனைகள் திமுக முகாமில் தற்போது நடந்து வருவதாக கூறப்படுகிறது.
அதேபோலதிமுகவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வருவதே, அதன் கூட்டணிதான் என்பதால், தற்போதுள்ள கூட்டணியுடனேயே சட்டப்பேரவை தேர்தலிலும் களமிறங்க திமுக முடிவு செய்திருக்கிறதாம். ஆனால், மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இடம் பெற காங்கிரஸ் கட்சி விரும்புவதால், அது தொடர்பாகவும் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
மிகப்பெரிய வியூகம்: எப்படியும் 200க்கும் மேற்பட்ட இடங்களிலும், திமுக தனித்து 170-க்கும் மேற்பட்ட இடங்களிலும் வெல்வது தொடர்பான ஆலோசனைகள்தான் திமுகவில் ஓடிக்கொண்டிருக்கிறதாம்.
அந்தவகையில், வரக்கூடிய 2026 சட்டப்பேரவை தேர்தலிலும் வெற்றி பெற்றுவிட்டால், திமுக 5 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து ஆட்சியில் இருந்ததில்லை என்ற வரலாற்றையும் மாற்றியமைக்க ஸ்டாலின் வியூகம் வகுத்து வருகிறாராம். பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications