"டெட் லாக்".. அதிமுக தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்ட முக்கிய பாயிண்ட்.. ஓபிஎஸ்ஸுக்கு பெரிய சிக்கல்
சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இருவரையும் சேர்ந்து பணியாற்றும்படி கட்டாயப்படுத்த முடியாது என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு பிறகு அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. "கலையலங்காரம் எல்லாத்தையும் மாத்தி மறுபடியும் ஹாஸ்ப்பிட்டல் ஆக்குங்கடா" என்று வசூல் ராஜாவில் கமல் ஹாசன் சொல்வது போலத்தான் அதிமுகவில் மீண்டும் எல்லாம் பழைய நிலைக்கு திரும்பி உள்ளது.
பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது . உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் இந்த தீர்ப்பை வழங்கி உள்ளனர்.
இதன் மூலம் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நீடிப்பார்.

தீர்ப்பு
இந்த வழக்கில் நீதிபதிகள் இருவரும் முக்கியமான விஷயம் ஒன்றை குறிப்பிட்டுள்ளனர். அதில், தனி நீதிபதி பெரும்பான்மை உறுப்பினர்களின் எண்ணத்தை கவனத்தில் கொள்ளாமல் தீர்ப்பு வழங்கி உள்ளார். அதோடு கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இரண்டும், இரண்டு தலைவர்களும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் மனுதாரர்கள் சேர்ந்து செயல்பட தயாராக இல்லை.

டெட் லாக்
இது கட்சிக்குள் ஒரு "டெட் லாக்கை" உருவாக்கி உள்ளது. இதனால் கட்சிக்குள் எந்த விதமான செயலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கட்சியின் செயல்பாடுகள் இதனால் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் கட்சியில் செயல்பாடுகள் செய்ய முடியவில்லை என்பதால்தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. ஆனால் தற்போது இரண்டு பேரும் சேர்ந்து செயல்பட தயாராக இல்லை. ஒருங்கிணைப்பாளர் பதவி காலியானதாக இணை ஒருங்கிணைப்பாளர் கடிதம் எழுதி உள்ள நிலையில், அதே பதவியில் தொடர உத்தரவிட்டது தவறு

ஒன்றாக செயல்பட முடியாது
அப்படி இருக்கும் போது இவர்களை ஒன்றாக செயல்பட சொல்லி கட்டாயப்படுத்த முடியாது. அதோடு இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருக்க விரும்பாத எடப்பாடி பழனிசாமியை அதில் இருக்க கட்டாயப்படுத்த முடியாது. இரண்டு தரப்பும் சேர்ந்து பணியாற்ற விரும்பாத போது போது அவர்களை சேர்ந்து பணியாற்றும்படி கட்டாயப்படுத்த முடியாது. அதனால் ஜூலை 11ம் தேதி, பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலுடன் நடந்த பொதுக்குழு செல்லும் என்று இரட்டை நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.

தனி நீதிபதி
முன்னதாக தனி நீதிபதி தீர்ப்பில், இரண்டு தலைவர்களும் சேர்ந்து 2 தேர்தலைசந்தித்தீர்கள் . 4 வருடம் ஆட்சி செய்தீர்கள். அப்படி இருக்கும் போது இரண்டு தலைவர்களும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்று கூறினார். இதன்பின் மேல்முறையீட்டு வழக்கில் இரட்டை நீதிபதி அமர்வில், நாங்கள் கண்டிப்பாக சேர்ந்து செயல்பட மாட்டோம், செயல்பட முடியாது என்று எடப்பாடி தரப்பு வாதம் வைத்தது. இந்த நிலையில்தான் எடப்பாடி தரப்பிற்கு ஆதரவாக இரட்டை நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications