தொட்டதெல்லாம் துலங்குதா.. முட்டிமோதும் "4 ராஜாக்கள்".. அடிமடியிலேயே "கை" வைத்து..புயல் கொண்ட மேலிடம்
சென்னை: தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர்கள் எல்லாம், தலைநகரில் மையம் கொண்டுள்ளதால், டெல்லியே பரபரத்து காணப்படுகிறது.. என்ன விஷயம்?
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக கே.எஸ்.அழகிரி கடந்த பிப்ரவரி, 2019-ல் நியமனம் செய்யப்பட்டார். அந்த கட்சியின் விதிமுறைகளின்படி 3 வருடங்கள் மட்டுமே, தலைவர் பதவியில் நீடிக்க முடியும்.

அழகிரி: அதன்படி அழகிரியின் பதவிக்காலம் கடந்த வருடம் பிப்ரவரியுடன் முடிந்துவிட்டது... இதையடுத்து, அந்த பதவியை பிடிக்க பலரும், கடந்த ஒருவருட காலமாகவே, முயற்சித்து வருகிறார்கள்.
ஏற்கனவே, காங்கிரஸிலிருந்து மூத்த நிர்வாகிகள் விலகல், தலைவர் நியமனம் போன்றவற்றால் குழப்பம் ஏற்பட்டதால், தலைவர் விவகாரம் பெரிதாக கவனிக்கப்படவில்லை.. பிறகு, பாரத் ஜோடோ யாத்திரை, ஈரோடு இடைத்தேர்தல் காரணமாக புதிய தலைவர் நியமனம் தள்ளிப்போனது.. இதற்கு பிறகு, கர்நாடக தேர்தல் நடந்து முடிந்தது.. அப்போதும் அறிவிக்கப்படவில்லை. இதற்கு பிறகு, ராகுல் காந்தி அமெரிக்கா சென்றுவிட்டார்.
தலைவர் யார்: இப்போது, தாயகம் திரும்பிஉள்ள நிலையில், டெல்லியில்தான் தங்கியிருக்கிறார். எனவே, தமிழக காங்கிரஸ் கட்சிக்குப் புதிய தலைவர் யார் என்ற போட்டி, உச்சக்கட்டத்துக்கு சென்றுவிட்டது.
மூத்த தலைவர்கள் செல்வப்பெருந்தகை, ஜோதிமணி, விஜயதாரணி, செல்லக்குமார், கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாகூர், திருநாவுக்கரசர் எம்.பி. ஆகியோர், இந்த தலைவர் பதவிக்கு, மும்முரமாக காய் நகர்த்தி வருகின்றனர்.
ஒரே குழப்பம்: அனைவருமே சீனியர்கள் என்பதால், யாரை தேர்ந்தெடுப்பது என்று மேலிடமே குழம்பி போயுள்ளதாம்.. இதில் ஹைலைட் என்னவென்றால், இந்த ஒவ்வொருவருக்குமே, டெல்லியில் இருக்கும் ஒவ்வொரு தலைவர்கள் சிபாரிசு செய்கிறார்களாம்.. அவர்களின் செல்வாக்குதான், தமிழக தலைவரை தேர்வு செய்வதில் அடித்தளமாக இருக்கும் என்கிறார்கள்.. இப்படி இழுபறி நீடித்து வரும்நிலையில், இது தொடர்பாக ஒரு அப்டேட் நமக்கு பிரத்யேகமாக கிடைத்திருக்கிறது.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அழைப்பின்பேரில், கடந்த 25-ந்தேதி டெல்லிக்கு சென்றிருந்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி. டெல்லியில் கார்கே, கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டவர்களையும் சந்தித்தார் அழகிரி. இந்த சந்திப்பில் தமிழக அரசியல் நிலைவரம், காங்கிரஸ் தலைவர் மாற்றம், செயல்தலைவர்கள் மாற்றம், காங்கிரஸ் அறக்கட்டளை விவகாரம் ஆகியவைகள் விவாதிக்கப்பட்டுள்ளன.
தமிழக தலைவராக அழகிரியும், செயல் தலைவர்களாக டாக்டர் ஜெயக்குமார், டாக்டர் விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம் ஆகியோர் இருக்கின்றனர்.. அதேபோல, செயல் தலைவராக இருந்த வசந்தகுமார் இறந்துவிட்டதால், கடந்த 2 ஆண்டுகளாக அவர் இருந்த இடத்துக்கு யாரும் இன்னமும் நியமிக்கப்படவில்லை.
2 காலியிடம்: அதேபோல, மயூரா ஜெயக்குமார் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக நியமிக்கப்பட்டுவிட்டதால் அவரது இடமும் காலியாக இருக்கிறது. ஆக, செயல் தலைவருக்குரிய 2 இடம் காலியாக தற்போது இருக்கிறது...
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழக தலைவரை மாற்றியமைக்க ராகுல் விரும்புகிறார் என்பதை அழகிரியிடம் வேணுகோபால் தெரிவித்திருக்கிறார். இதை அழகிரி ஏற்கனவே எதிர்பார்த்திருந்த விஷயம்தான்.. அதனால் அவரிடம் எந்த பதட்டமும் காணப்படவில்லை.. அதேசமயம், "நாடாளுமன்ற தேர்தல் வரை என்னை தலைவர் பதவியில் அனுமதியுங்கள்" என அழகிரி கேட்டுக்கொண்டாராம்.. மேலும், ராகுல்காந்தியிடம் இது குறித்து ஆலோசிப்பதாகவும் அழகிரியிடம் சொல்லியிருக்கிறார் கார்கே.
குழப்பம்: இதுகுறித்து காங்கிரஸ் தலைவர்கள் வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது, "தமிழக தலைவரை மாற்றியாக வேண்டும் என்பதில், ராகுல் உறுதியாக இருக்கிறார். எம்பிக்கள் செல்லக்குமார், ஜோதிமணி, கர்நாடக தேர்தல் வெற்றிக்கு காரணமானவர்களில் ஒருவரான சசிகாந்த் செந்தில் ஆகியோரையே ராகுல் காந்தி பரிசீலிக்கிறார்.. ஆனால், தலைவர் பதவியை கைப்பற்ற கார்த்தி சிதம்பரம், மாணிக்தாக்கூர், செல்வப்பெருந்தகை, ரூபி மனோகரன் உள்ளிட்ட பலரும் காய்களை நகர்த்தியபடி இருக்கிறார்கள்.
தலைவர் மாற்றம் நடக்கும்போது செயல் தலைவர்களும் புதிதாக நியமிக்கப்படவிருக்கிறார்கள். இதற்காக, காங்கிரஸ் தலைவர்களின் வாரிசுகள் முட்டி மோதுகின்றனர். இப்படி பலரும் மோதுவதால் செயல்தலைவர் கான்செப்ட்டையே ரத்து செய்துவிடலாமா? செயல்தலைவர்கள் யாரும் கடந்த காலங்களில் சரியாக வேலை பார்க்கவில்லை. அதனால் அந்த பதவிகளை ரத்து செய்துவிடலாமா? எனவும் மேலிடம் ஆலோசிக்கிறது.

செயல் தலைவர்: ஆனால், ப.சிதம்பரம் போன்ற சீனியர்கள், கட்சியில் இளைஞர்களுக்கு பதவி கொடுத்து ஊக்கப்படுத்தினால் தேர்தல் நேரத்தில் ஒரு இலக்கை அவர்களுக்கு கொடுத்து பணியாற்ற சொல்லலாம். அதனால் செயல்தலைவர் பதவி இருப்பது நல்லது தான் என சொல்லியிருக்கிறாராம்.. எனவே, தலைவர் விஷயத்தில், ஒரு முடிவு எடுக்கப்பட்ட பிறகு, செயல்தலைவர் விஷயத்திலும் முடிவு தெரியும்" என்று நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்..
இந்தநிலையில் சென்னை திரும்புகிறார் கேஎஸ் அழகிரி. அவர் சென்னை வந்ததும் இன்னும் சத்தியமூர்த்திபவனின் பரபரப்பு அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.. பிப்ரவரி மாதமே பணி ஓய்வு பெற்றும் தலைவர் பதவியில் அழகிரி நீடித்து வருகிறார்.. ஒருவேளை, எம்பி தேர்தல் வரையும், தலைவர் பதவியில் தொடர் நேர்ந்தால், அது யாருக்கும் கிட்டாத வாய்ப்பாகத்தான் இருக்கும் என்கிறார்கள் கதர் சட்டைகள்!!












Click it and Unblock the Notifications