நள்ளிரவில் ‘செக்’ வைக்கும் காக்கிகள்.. சென்னையில் இரவு நேரத்தில் வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க
சென்னை: "தம்பி வண்டிய ஓரமா நிறுத்துங்க..." - நள்ளிரவு 12 மணி. மெரினா சர்வீஸ் ரோடு முதல் ஜி.எஸ்.டி சாலை வரை இப்போது இந்த ஒரு குரல் தான் ஓங்கி ஒலிக்கிறது. தேர்தல் திருவிழாவுக்கான 'கவுண்ட்டவுன்' தொடங்கிவிட்ட நிலையில், சென்னை மாநகரம் இப்போது போலீஸாரின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

என்ன நடக்கிறது நள்ளிரவில்?
தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) அமலுக்கு வந்தாலே, அதிகார வர்க்கம் சுறுசுறுப்பாகிவிடும். குறிப்பாக, இரவு 10 மணிக்கு மேல் சென்னையின் முக்கிய சந்திப்புகள், மேம்பாலங்களின் கீழ் மற்றும் மாவட்ட எல்லைகளில் 'சல்லடை' போட்டு வாகனங்கள் தணிக்கை செய்யப்படுகின்றன. பிளைையிங் ஸ்குவாட் (Flying Squad) எனப்படும் பறக்கும் படையினரும், லோக்கல் போலீஸாரும் இணைந்து நடத்தும் இந்த 'நைட் ரைடு' வேட்டையில் சாமானியர்கள் முதல் விஐபிக்கள் வரை யாரும் தப்ப முடியாது.
நீங்கள் கவனிக்க வேண்டிய 'செக் லிஸ்ட்':
பணக்கட்டுகள் பத்திரம்: கையில் 50,000 ரூபாய்க்கு மேல் ரொக்கமாக வைத்திருப்பதைத் தவிர்க்கவும். ஒருவேளை மருத்துவ அவசரம் அல்லது வியாபாரத் தேவைக்காகக் கொண்டு சென்றால், அதற்கான முறையான ஆவணங்கள் (Bank Withdrawal receipt/Business Proof) கையில் இருக்க வேண்டும். இல்லையெனில், அந்தப் பணம் 'சீஸ்' செய்யப்பட்டு தேர்தல் கருவூலத்திற்குச் சென்றுவிடும். அதை மீட்பதற்குள் 'போதும் போதும்' என்றாகிவிடும்.
விலையுயர்ந்த பரிசுகள்: கணக்கில் வராத தங்கம் அல்லது வெள்ளிப் பொருட்களை மொத்தமாக எடுத்துச் செல்வதும் இப்போது பெரும் ரிஸ்க்.
மது & அன்பளிப்பு: மொத்தமாக மது பாட்டில்களையோ அல்லது வாக்காளர்களுக்கு வழங்கக்கூடிய பரிசுப் பொருட்களையோ (குக்கர், வேட்டி, சேலை) காரில் கொண்டு சென்றால், வண்டி 'அட்டாச்' செய்யப்படுவது உறுதி.
'ஸ்மார்ட்' டிப்ஸ்:
டிஜிட்டல் மயம்: முடிந்தவரை ஆன்லைன் பரிவர்த்தனைகளை (UPI/Net banking) பயன்படுத்துங்கள். பாக்கெட்டில் பணத்தோடு சுற்றுவதை விட, செல்போனில் 'ஸ்கேன்' செய்வது இப்போது உங்களுக்குப் பாதுகாப்பு!
அடையாள அட்டை: அலுவலகம் முடிந்து நள்ளிரவில் வீடு திரும்புபவர்கள், கண்டிப்பாகத் தங்களின் கம்பெனி ஐடி கார்டு அல்லது ஆதார் கார்டை கையில் வைத்திருக்கவும்.
நிதானம் முக்கியம்: போலீஸார் வண்டியை நிறுத்தினால் பதற்றப்படாமல் ஒத்துழைப்பு கொடுங்கள். வீணான வாக்குவாதங்கள் உங்கள் நேரத்தை விரயமாக்கும்.
பாட்டம் லைன்: சட்டம் தன் கடமையைச் செய்கிறது... நாமும் விழிப்புணர்வோடு இருந்தால், இந்தத் தேர்தல் காலம் 'டென்ஷன்' இல்லாத பயணமாக அமையும்!
தேதி அறிவிக்கப்பட்ட அந்த நொடியில் இருந்தே 'தேர்தல் நடத்தை விதிமுறைகள்' (Model Code of Conduct - MCC) அமலுக்கு வரும். 'அப்படினா என்ன? இனி என்னென்ன மாற்றங்கள் நடக்கும்?' - ஒரு குயிக் லுக்!
1. நடத்தை விதிகள் என்றால் என்ன?
தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடப்பதையும், ஆளும் கட்சிகள் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்யாமல் இருப்பதையும் உறுதி செய்ய தேர்தல் ஆணையம் வகுத்துள்ள கட்டுப்பாடுகளே இந்த MCC. இது இன்று மாலை தொடங்கி, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை அமலில் இருக்கும்.
2. ஆளும் கட்சி மற்றும் அமைச்சர்களுக்குப் பூட்டு!
புதிய திட்டங்கள் கிடையாது: இன்று மாலைக்கு மேல் முதலமைச்சரோ அல்லது அமைச்சர்களோ எந்த ஒரு புதிய திட்டத்தையும் அறிவிக்க முடியாது. அடிக்கல் நாட்டு விழா, புதிய சாலைத் திட்டங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என எதுவுமே இனி 'நோ நோ' தான்.
அரசு இயந்திரம்: அரசு வாகனங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் அரசு அலுவலகங்களைத் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தக் கூடாது. அமைச்சர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ பயணத்துடன் தேர்தல் பணிகளை இணைக்கக் கூடாது.
விளம்பரங்கள்: அரசு செலவில் சாதனைகளை விளக்கிச் செய்தித்தாள்கள் அல்லது தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்யத் தடை விதிக்கப்படும். ஏற்கனவே உள்ள அரசு விளம்பரங்கள், பேனர்கள் உடனடியாக அகற்றப்படும்.
3. அரசியல் கட்சிகள் கவனிக்க வேண்டியவை:
விமர்சனங்கள்: எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும்போது அவர்களின் கொள்கைகள், திட்டங்கள் குறித்து மட்டுமே பேச வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கை அல்லது குடும்பத்தைப் பற்றி விமர்சிப்பது விதிகளுக்கு எதிரானது.
மத உணர்வுகள்: ஜாதி, மதம் அல்லது மொழி உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசுவதோ, வழிபாட்டுத் தலங்களைப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்துவதோ கடும் நடவடிக்கைக்கும், தகுதி நீக்கத்திற்கும் வழிவகுக்கும்.
அனுமதி கட்டாயம்: பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த அந்தந்தப் பகுதி காவல்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
4. பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை:
பணப் புழக்கம்: 50,000 ரூபாய்க்கு மேல் ரொக்கமாகக் கொண்டு சென்றால் முறையான ஆவணங்கள் கையில் இருக்க வேண்டும். இல்லையெனில், தேர்தல் பறக்கும் படையினரால் அந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட வாய்ப்புள்ளது.
புகார் அளிக்க 'C-Vigil': உங்கள் பகுதியில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தாலோ அல்லது விதிமீறல்கள் நடந்தாலோ 'cVIGIL' ஆப் மூலம் நேரடியாகப் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்துப் புகார் அளிக்கலாம். 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.












Click it and Unblock the Notifications