ரஜினிகாந்த் தமிழகத்தில் எழுச்சியை உருவாக்குவார்... சொல்வது யார் தெரியுமா..?
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சியை உருவாக்குவார் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.
தமிழகத்தை வளமாக்கும் முயற்சியில் ரஜினிகாந்த் ஈடுபட்டுள்ளதாகவும் அதில் அவர் வெற்றியும் பெறுவார் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்து மக்கள் கட்சியின் ஆதரவு எப்போதும் ஆன்மிக அரசியலுக்குத்தான் என அர்ஜுன் சம்பத் தெரிவித்திருக்கிறார்.

சட்டமன்றத் தேர்தல்
கொரோனா பரபரப்பு படிப்படியாக குறைந்து வரும் சூழலில் அரசியல் பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த சில மாதங்களாக ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்த அவரது ஆதரவாளர்கள், ஆலோசகர்கள் இப்போது மீண்டும் ரஜினி வருவார் வெல்வார் என்கிற ரீதியில் பேசத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் ரஜினியின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகம் வளமாகும்
நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சியை உருவாக்குவார் என்றும் தமிழகத்தை வளமாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டு வருவதாகவும் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம் என்ற அற்புதம் நிகழும் என்றும் ரஜினிகாந்திற்கு இந்து மக்கள் கட்சி பக்கபலமாக நிற்பதோடு முழு ஆதரவு தரும் எனவும் கூறியுள்ளார்.

தேர்தல் கூட்டணி
ரஜினிகாந்த் நவம்பரில் கட்சி தொடங்குவது உறுதி எனக் கூறப்படும் நிலையில் தனித்து தேர்தலை சந்திப்பாரா அல்லது கூட்டணி அமைப்பாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இதனிடையே தனித்து களம் காண வேண்டும் என்றும் கிங் மேக்கராக இருப்பதை விட அவரே கிங்காக வர வேண்டும் எனவும் ரசிகர்கள் விருப்பம் தெரிவிக்கின்றனர்.

ரஜினி பேச்சு
கடந்த மார்ச் 12-ம் தேதி சென்னை லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், தேர்தலின் போது மட்டும் நிர்வாகிகளை நியமித்துவிட்டு தேர்தலுக்கு பிறகு நிர்வாகிகளை கலைத்துவிடுவது, மக்களிடம் எழுச்சியும், அலையும் ஏற்பட வேண்டும் அவ்வாறு ஏற்படும் போது தாம் நிச்சயம் வருவேன் எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications