பொன்னை பாலு உயிருக்கு ஆபத்து.. போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி அவரது மனைவி கமிஷனரிடம் கண்ணீர் கோரிக்கை!
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ள பொன்னை பாலுவுக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அவரது மனைவி மனு அளித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி மாலை சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் முன்பு கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொலை தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கடந்த ஆண்டு கொல்லப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பியான ராணிப்பேட்டை மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்த பொன்னை பாலு (39), அவரது கூட்டாளிகள் பெரம்பூர் திருமலை (45), திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை மணிவண்ணன் (26), குன்றத்தூர் திருவேங்கடம் (33) உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். அனைவரும் நீதிமன்ற காவலில் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் கடந்த ஆண்டு வெட்டி கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி தான் பொன்னை பாலு. தனது அண்ணன் கொலைக்கு பழிவாங்க, கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் தகவல் வெளியானது. கைது செய்யப்பட்ட 11 பேரையும் 5 நாள் காவலில் விசாரிக்க போலீசாருக்கு எழும்பூர் நீதிமன்றம் கடந்த 11ஆம் தேதி அனுமதி வழங்கியது.
இதையடுத்து, சென்னை பரங்கிமலையில் உள்ள காவல் இணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து அவர்களிடம் தனித்தனியாக, போலீசார் விசாரணை நடத்தினர். வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த பொன்னை பாலு, 4-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த திருவேங்கடத்திடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், நேற்று அதிகாலையில் திருவேங்கடத்தை விசாரணைக்காக மாதவரம் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றபோது போலீஸ் பிடியில் இருந்து தப்ப முயன்ற ரவுடி திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டார். மாதவரம் ஆட்டுத்தொட்டி அருகே சென்றபோது இயற்கை உபாதைக்காக வண்டியை நிறுத்தியபோது திருவேங்கடம் திடீரென தப்பி ஓடினார். போலீசார் விரட்டி சென்றும் அவரை பிடிக்க முடியவில்லை.
தண்டையார்பேட்டை காவல் ஆய்வாளர் முகமது புகாரி தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். புழல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வெஜிடேரியன் வில்லேஜ் பகுதியில் தகர ஷீட்டால் அமைக்கப்பட்டிருந்த கொட்டகையில் அவர் பதுங்கி இருப்பது தெரியவந்ததால், போலீசார் சுற்றி வளைத்தனர். சரணடையுமாறு அவரை எச்சரித்தனர்.
ஆனால், அவர் கொட்டகையில் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி சுட்டார். இதில் சுதாரித்து தப்பிய ஆய்வாளர் முகமது புகாரி, தனது துப்பாக்கியால் சுட்டார். இதில் திருவேங்கடத்தின் வலது பக்க வயிறு, இடது பக்க மார்பில் 2 குண்டுகள் பாய்ந்தன. சுருண்டு விழுந்த அவர் உயிரிழந்தார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரௌடி என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிர வைத்த என்கவுண்டர்! மாஜிஸ்திரேட் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் உடல்
ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் நடந்த ஒரு வாரத்தில் அதில் தொடர்புடையவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலுவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி அவரது மனைவி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி தற்போது போலீஸ் கஸ்டடியில் இருக்கும் பொன்னை பாலுவுக்கு ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்களால் ஆபத்து இருப்பதாகவும், அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி அவரது மனைவி, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications