அதிர வைத்த என்கவுண்டர்! மாஜிஸ்திரேட் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம் உடல்
சென்னை: என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி திருவேங்கடத்தின் உடல் பிரேதப் பரிசோதனை முடிந்தது. மாதவரம் மாஜிஸ்திரேட் தீபா முன்னிலையில் நள்ளிரவு திருவேங்கடத்தின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
பிரேதப் பரிசோதனை முடிந்ததால் ரவுடி திருவேங்கடத்தின் உடல் அவரது உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்படுகிறது. இதையடுத்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் கடந்த 5ஆம் தேதி, கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து இந்த கொலை வழக்கில், பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், அருள் உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 11 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்த போலீசார், பரங்கிமலையில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து, தனித்தனியாக அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். காவலில் எடுக்கப்பட்ட ரவடி திருவேங்கடத்தை நேற்று அதிகாலை விசாரணைக்காக சென்னை மாதவரம் ஏரிக்கரை அருகே அழைத்துச் சென்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை தனது வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக திருவேங்கடம் கூறியதன் பேரில் அவரை அங்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது ரெட்டேரி பகுதியில் இயற்கை உபாதைக்காக காவல் வாகனத்தை நிறுத்தி உள்ளனர். அப்போது, திருவேங்கடம் தப்பி ஓடியுள்ளார்.
புழல் வெஜிடேரியன் நகர் பகுதியில் ஒரு தகர கொட்டகையில் பதுங்கியுள்ளார் திருவேங்கடம். அங்கு அவர் வைத்திருந்த துப்பாக்கியால் காவலர்களை நோக்கி சுட்டுள்ளார். இதையடுத்து தற்காப்புக்காக போலீசார் திருவேங்கடம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் உயிரிழந்து விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்கு அந்த இடத்தில் வைத்து தான் கொலையாளிகள் திட்டம் போட்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டம் போட்ட அதே இடத்தில் ரவுடி திருவேங்கடம் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.
ரவுடி திருவேங்கடம் என்கவுண்டரை தொடர்ந்து சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையர் நரேந்திர நாயர், கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் மாதவரம் நீதிமன்ற மாஜிஸ்திரேட் தீபா ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு நடந்த என்கவுண்டர் தொடர்பாக காவல்துறையினர் அவரிடம் எடுத்துரைத்தனர். என்கவுண்டர் நடைபெற்ற போது இருந்த காவலர்களிடமும் மாஜிஸ்திரேட் தீபா விசாரணை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து, திருவேங்கடத்தின் உடல் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் தீபா முன்னிலையில் நள்ளிரவில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. திருவேங்கடத்தின் உடல் பிரேதப் பரிசோதனை முடிவடைந்துள்ள நிலையில் அவரது உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications