ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு... ஏ1 குற்றவாளியாக சேர்க்கப்பட்ட ரவுடி நாகேந்திரன் உயிரிழப்பு
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஏ1 குற்றவாளி ரவுடி நாகேந்திரன் உயிரிழந்துள்ளார். கல்லீரல் பாதிப்பு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரவுடி நாகேந்திரன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர் மீது உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி அவரது வீட்டருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கியது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த செம்பியம் போலீசார் 27 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் ஏ1 குற்றவாளியாக ரவுடி நாகேந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கானது மாவட்ட முதன்மை நீதிபதி கார்த்திகேயன் விசாரித்து வருகிறார்.
சிபிஐ விசாரணை
முன்னதாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கினை தமிழக காவல்துறை நியாயமாக விசாரிக்கவில்லை என்றும், வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆம்ஸ்ட்ராங் சகோதரர் இம்மானுவேல் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், "ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும், தமிழக காவல்துறை வசம் உள்ள விசாரணை ஆவணங்களை உடனடியாக சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும். வழக்கை விசாரித்து 6 மாதங்களில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டது.
தமிழக அரசு மேல்முறையீடு
எனினும் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான(ஏ1) நாகேந்திரன் உயிரிழந்துள்ளார்.
இதற்கிடையே ஏ1 குற்றவாளியான ரவுடி நாகேந்திரன் கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த ஆகஸ்டு மாதம் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று ரவுடி நாகேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications