இரட்டை இலை சின்னத்தில் ஆம்ஸ்ட்ராங் மனைவி போட்டி? எடப்பாடி போடும் அதிரடி பிளான்!
சென்னை: அதிமுக கூட்டணியில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கிற்கு ஒரு சீட் ஒதுக்கப்படவிருப்பதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான ஒரு கூட்டணியும், அதிமுக மற்றும் பாஜக அங்கம் வகிக்கும் மற்றொரு கூட்டணியும் களம் காண்கின்றன. நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தனித்தே களம் காண்கிறது. பாமக நிறுவனர் ராமதாஸ், சசிகலா இணைந்து ஒரு கூட்டணியை அறிவித்துள்ளனர்.

என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமமுக, குக்கர் சின்னத்துக்கு பதிலாக இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவதாக கூறப்படுகிறது. 180 முதல் 185 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் தான் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
என்.டி.ஏ கூட்டணியில், அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தமாகா ஆகிய கட்சிகளுக்கு மட்டும்தான் பொது சின்னம் உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில், பாஜக அணியில், புதிய நீதி கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இருந்தன. இந்தக் கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிட்டன.
இந்நிலையில், இதுபோன்ற சிறிய கட்சிகள் இந்த முறை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எடப்பாடி பழனிசாமியிடம் சம்மதம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடிக்கு அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் முதலாமாண்டு நினைவு நாளில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை அவரது மனைவி பொற்கொடி தொடங்கினார்.
இந்நிலையில் 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கிற்கு ஒரு சீட் ஒதுக்கப்படவிருப்பதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி இரட்டை இலை சின்னத்தில் நிற்பது போல பொற்கொடியும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது.
ஆம்ஸ்ட்ராங், கடந்த 2000ஆம் ஆண்டு புரட்சி பாரதம் கட்சியில் இணைந்து தனது அரசியல் வாழ்வைத் தொடங்கினார். 2006-இல் டாக்டர் பீமாராவ் தலித் அசோசியேஷன் என்ற அமைப்பைத் தொடங்கினார். 2006 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு 99ஆவது வட்டத்தின் மாமன்ற உறுப்பினராகத் தேர்வானார்.
2007ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். 2011ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2007 ஆம் ஆண்டு முதல் தான் இறக்கும் வரை 17 ஆண்டுகள் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்து வந்தார் ஆம்ஸ்ட்ராங்.












Click it and Unblock the Notifications