செங்கல்பட்டில் லாரியை கடத்திய நெல்லை சுபாஷ்.. 2 நாளுக்கு முன் செய்த மற்றொரு சம்பவம்! பதை பதைப்பா இருக்கே
சென்னை: செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி அருகே லாரியை கடத்தி சென்ற சுபாஷ் என்ற இளைஞரிடம் விசாரணை நடத்திய போலீசார், தற்போது அவரை மனநல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். நெல்லையை சேர்ந்தவரான இவர் ஏற்கனவே இது போல் இரண்டு முறை பொதுமக்களிடம் தகராறு செய்துவிட்டு கடைசியில் மனநலன் சரியில்லாதவர் போல் செய்திருக்கின்ற செயல் திடுக்கிட வைத்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி அருகே லாரி ஒன்று இன்று காலை வந்து கொண்டிருந்தது. அந்த லாரியின் டிரைவர் டீ குடிப்பதற்காக கீழே இறங்கி சென்ற நேரத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென லாரியை இயக்கி சென்றார். அதோடு மட்டுமின்றி சினிமா பட காட்சிகளில் வருவது போல் விபத்துகளை ஏற்படுத்திக்கொண்டே அந்த லாரியை இயக்கி சென்றார்.

எனினும் லாரி டிரைவர் அந்த லாரியை பின்னால் விரட்டி சென்று பிடிக்க முயன்றார். ஆனால் அந்த நபர் வேகமாக லாரியை இயக்கி சென்றார். சென்னை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் லாரியை ஓட்டிச்சென்றார். இதையடுத்து லாரி டிரைவர் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரிடம் லிஃப்ட் கேட்டு லாரியை பின்னால் வேகமாக துரத்தி சென்றனர்.
அப்போது மகேந்திரா சிட்டி அருகே லாரி சென்ற போது லாரியை மர்ம நபர் நிறுத்தினார். அப்போது அங்கு நின்ற போக்குவரத்து போலீசார் லாரியில் ஏற முயன்றார். போலீசார் ஏறுவதை பார்த்ததும் மீண்டும் அந்த நபர் லாரியை வேகமாக இயக்கிச் சென்றார். எனினும் லாரியின் படியில் ஒரு காலை வைத்துக்கொண்டு போலீஸ்காரர் முருகன் என்பவர் அந்த மர்ம நபரை பிடிக்க முயன்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி இருந்தது.
சுமார் 10 கிமீ தூரம் மறைமலை நகர் அருகே வந்த போது மேலும் கூடுதல் போலீஸ்காரர்கள் அங்கு வந்து லாரியை மடக்கி பிடித்தனர். விசாரணையில் லாரியை கடத்தி சென்ற இளைஞர் சுபாஷ் என்பது நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றனர். போலீசை பார்த்ததும் அவர் மனநலன் பாதிக்கப்பட்டவர் போல் நடித்துள்ளார்.
இதனால் போலீசார் தற்காப்புக்காக கை மற்றும் கால்களை கட்டியபடி மனநல மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளன. அதாவது அந்நியன் படத்தில் விக்ரம் கதாபாத்திரம் போல ஏற்கனவே இதே பாணியில் அவர் ஏமாற்றியிருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
நெல்லையை சேர்ந்த சுபாஷ் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக ஊரப்பாக்கத்தில் கடைக்கு பால் குடிப்பதற்காக சென்றிருக்கிறார். அப்போது அந்த கடையில் ரூபாய்க்கு பதிலாக இலங்கை நாட்டின் பணத்தை கொடுத்துள்ளார். இதனால் கடை ஊழியர் அதை வாங்கவில்லை. இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், சூடாக இருந்த பாலை அந்த ஊழியரின் மேல் ஊற்றிவிட்டு தப்ப முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் ஒன்று திரண்டு சுபாஷை தாக்கியுள்ளனர். அப்போது அவர் தான் ஒரு மனநலன் சரியில்லாதவர் போல் செய்துள்ளார். இதனால் அந்த மக்கள் பாவப்பட்டு அப்படியே விட்டு சென்றுள்ளனர்.
இதேபோல் செங்கல்பட்டு அருகே சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவரிடம் கைப்பையை பறித்து சென்றுள்ளார். தொடர்ந்து அதே பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் கட்டுமானத்துக்கு வைத்திருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தியிருக்கிறார். இது தொடர்பாக பொதுமக்கள் திரண்டு கேட்டபோது அப்போது இதேபோன்று மனநலன் சரியில்லாதவர் போல் செய்திருக்கிறார். இந்த நிலையில் தான் இன்று லாரியை ஓட்டி சென்று கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுபாஷ் உண்மையிலேயே மனலநலன் பாதிக்கப்பட்டவரா? இல்லை வேண்டுமென்றே இப்படி செய்துவிட்டு ஆக்டிங் செய்கிறாரா என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications