பேரு கெடுது.. ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிரான அப்பல்லோ வழக்கு.. அதிரடியாக டிஸ்மிஸ் செய்த ஹைகோர்ட்
Recommended Video
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்து அப்பல்லோ மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்ற ஜெயலலிதா, 2016ம் ஆண்டு, டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் குற்றம்சாட்டிய நிலையில், இதுபற்றி விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார்.
அப்பல்லோ வழக்கு
ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், இந்த வழக்கில் தொடர்புள்ள பல்வேறு நபர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறது. அதிலும் அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட பல தரப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அப்பல்லோ நிர்வாகம், அதிருப்தியடைந்தது. இதையடுத்து ஹைகோர்ட்டில் ஒரு வழக்கை அப்பல்லோ நிர்வாகம் தாக்கல் செய்தது. தங்கள் மருத்துவர்கள் விசாரணை ஆணையத்தில் ஆஜராகுவதில் விலக்கு அளிக்க வேண்டும், விசாரணை ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும். விசாரணை தொடர்பாக 21 சிறப்பு மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது அப்பல்லோ நிர்வாகம்.
நாகரீகம் வேணாமா? ஓட்டுக்காக எப்படி வேணும்னாலும் ஏமாத்தலாமா? பொன்.ராதா கேள்வி
தமிழக அரசு வாதம்
இந்த வழக்கு, நீதிபதிகள், ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த மாதம் 12ம் தேதி இறுதியாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் ஆஜரான, அரசு தலைமை வக்கீல் விஜயநாராயணன், அனைத்து தரப்பு வாதங்களையும் முறையாக கேட்டு பதிவு செய்து வருகிறது ஆறுமுகசாமி ஆணையம். எனவே அப்பல்லோ கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றார்.
90 சதவீத விசாரணை
ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சுந்தரேஷ், வாதிடுகையில், ஜெ. மரணத்திலுள்ள சந்தேகங்களை களையவே இந்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது. ஆணையம் எந்தவிதமான பாரபட்சம் காட்டாமல் விசாரித்து வருகிறது. ஒளிவு மறைவு இல்லை. மனுதாரர் கற்பனையாக சில குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். ஆணையம் இதுவரை 90 சதவீத விசாரணையை முடித்துவிட்டது, என்று வாதிட்டார்.
அப்பல்லோ வாதம்
அப்பல்லோ மருத்துவமனை சார்பில் ஆஜராகியிருந்த வக்கீல்கள், எங்கள் மருத்துவமனையை குற்றவாளியாக சித்தரிக்க முயற்சி நடக்கிறது. பொது மக்களிடையே அப்பல்லோ மருத்துவமனை பற்றிய நற்பெயரை ஆணையம் சிதைக்கிறது. எனவே ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டால்தான் ஆணையத்திற்கு உரிய தெளிவு கிடைக்கும் என்று வாதிட்டனர்.
அதிரடி தீர்ப்பு
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த, நீதிபதிகள் இன்று தங்கள் தீர்ப்பை இன்று வழங்கினர். அதில் கூறுகையில், ஆணையம் தனது 90 சதவீத பணிகளை முடித்துவிட்ட நிலையில், அனைத்து தரப்பு கோரிக்கைகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். அவர்களுக்கான வாய்ப்புகளை கொடுக்க வேண்டும். ஆணையம் தனது சட்ட விதிமுறைகள் கீழ்தான் விசாரிக்க வேண்டும். 21 மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்கிறோம். ஆணையம் அரசுக்கு அளிக்கும் அறிக்கை அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.