மூடநம்பிக்கை கருத்து.. அசோக் நகர்+சைதாப்பேட்டை பள்ளி தலைமை ஆசிரியர்கள் இடமாற்றம்! கல்வித்துறை ஆக்ஷன்
சென்னை: சென்னை அசோக் நகரில் அரசு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மாகவிஷ்ணு எனும் நபர், அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களை கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். இந்த விவகாரத்தில் விசாரணையில் இறங்கிய பள்ளி கல்வித்துறை, அசோக் நகர் மட்டுமல்லாது, சைதாப்பேட்டை பள்ளியின் தலைமை ஆசிரியரையும் பணியிட மாற்றம் செய்திருக்கிறது.
சென்னை அசோக்நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாணவிகளுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி என்ற பெயரில் மகாவிஷ்ணு எனும் பேச்சாளரை அழைத்து வந்து பேச வைத்துள்ளனர். அவர் தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கு பதிலாக மூட நம்பிக்கையை விதைத்துள்ளார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அவர் பேசிய கருத்துகள் பகுத்தறிவுக்கு ஒவ்வாதவை என்றும், மாணவிகள் அழகாக இல்லாததற்கு கடந்த பிறவிகளில் செய்த பாவம் தான் காரணம் என்றும், மகாவிஷ்ணு பேசியுள்ளார் எனவும், கல்வியை விதைக்க வேண்டிய பள்ளிகள் மூட நம்பிக்கையை விதைப்பவர்களின் வேட்டைக்காடாக மாற்ற பள்ளிக்கல்வித்துறை முயல்வது கண்டிக்கத்தக்கது எனவும் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
மகாவிஷ்ணு என்ற நபருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அந்த நபரின் மூட நம்பிக்கை பேச்சுகளை கண்டித்த ஆசிரியரை அந்த நபர் கடுமையாக விமர்சித்திருக்கிறார், அதை எவரும் எதிர்த்து கேள்வி கேட்கவில்லை. மட்டுமல்லாது கேள்வி எழுப்பிய ஆசிரியரை பார்த்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியை விட ஆசிரியர்கள் பெரியவர்களா? என்று அந்த நபர் வினா எழுப்பியுள்ளார். அந்த அளவுக்கு அவருக்கு தைரியத்தைக் கொடுத்தவர்கள் யார்? என்று திமுக கூட்டணி கட்சிகளே கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை விசாரணையில் இறங்கியது. விசாரணையை அடுத்து, அசோக் நகர் பள்ளியின் தலைமை ஆசிரியர், திருவள்ளூர் கோவில்பதாகை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இதனை தொடர்ந்து, சென்னை சைதாப்பேட்டை அரசு மாதிரி பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications