ஓ.பன்னீர்செல்வத்தை துரத்தும் சொத்துக் குவிப்பு வழக்கு! மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
சென்னை: ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை உயர்நீதிமன்றம் விசாரிக்க தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் பின்னணி விவரம் வருமாறு;
கடந்த 2001 - 2006 அதிமுக ஆட்சி காலத்தில் சிறிது காலம் முதல்வராகவும், வருவாய் அமைச்சராகவும் பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம் மீது சொத்துக்குவிப்பு வழக்குப் பதியப்பட்டது. அதிமுக ஆட்சிக்காலத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்து தனது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதா, சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாரி குவித்ததாக ஓபிஎஸ் மீது தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது.

இந்த வழக்கு விசாரணை தேனியில் நடைபெற்றால் முறையாக இருக்காது எனக் கருதி சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில், குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆவணங்கள் இல்லை என்பதால் மேற்கொண்டு வழக்கை நடத்தவில்லை என்று கூறி புகாரை திரும்ப பெற்றுக்கொள்வதாக நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு எதிரான வழக்குகளில் இருந்து அனைவரையும் சிவகங்கை மாவட்ட நீதிமன்றம் விடுவித்து. இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மிரண்டு போய்விட்டார்.
இதனால் தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடைக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார் ஓ.பன்னீர்செல்வம். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதுடன், வழக்கின் தன்மை, தகுதியின் அடிப்படையிலேயே தனி நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் இந்த வழக்கை விசாரிப்பதாகவும் கூறியுள்ளது. இதனால் இதில் தலையிட விரும்பவில்லை எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே அதிமுகவிலிருந்து ஓரங்கட்டப்பட்டு அரசியல் எதிர்காலமே சூனியமாக உள்ள நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு உயர்நீதிமன்றத்தால் தூசு தட்டி எடுக்கப்பட்டுள்ள சொத்துக்குவிப்பு வழக்கு மேலும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி கொடுத்துள்ளது. பாஜகவும் தன்னை கண்டுகொள்ளவில்லை, வழக்கும் துரத்துகிறது என்பதால் ஓ.பன்னீர்செல்வம் அப்செட் மனநிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications