"எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவார்” என பிரபல ஜோதிடர் கணித்தாரா? அவரே வந்து மறுத்ததால் பரபரப்பு!
சென்னை: எடப்பாடி பழனிசாமி வரும் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆவார் என ஜோதிடர் ரிஷியானந்தா கணித்ததாக வார இதழில் வெளியான தகவலுக்கு ஜோதிடர் ரிஷியானந்தாவே மறுப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக களப்பணி ஆற்றி வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு பேச்சுகளும் சூடு பறக்கின்றன. வரும் சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கு வாய்ப்பு அதிகம் என்ற விவாதங்களும் சூடு பறக்க நடந்து வருகிறது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவார் என பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்ததாக தகவல் வெளியானது.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது மனைவியுடன் தம்பதி சமேதராக திருப்பூரைச் சேர்ந்த தென்னரசு என்கிற ரிஷியானந்தாவிடம் ஜோதிடம் பார்த்ததாகவும், அதில், கன்னி ராசியில் பிறந்த எடப்பாடி பழனிசாமிக்கு தற்போது புதன் திசை நடக்கிறது என்றும், சூரியனும், வலுவுடன் பயணிப்பதால் தனித்திறனுடன் செயல்படுவீர்கள். ராஜயோகம் உள்ளதால் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகும் யோகம் உள்ளது என ரிஷியானந்தா கூறியதாக பிரபல வார இதழ் செய்தி வெளியிட்டு இருந்தது.
இந்த செய்தி கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் தான் இது போன்று எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும் மேலும் எடப்பாடி பழனிசாமியை தான் இதுவரை சந்தித்ததே இல்லை என்றும் ஜோதிடர் ரிஷியானந்தா திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னிடம் திமுக அதிமுக என அரசியல் பாகுபாடு இன்றி பலர் வரும் நிலையில், நானும் கட்சி சார்ந்து செயல்பட மாட்டேன் எனவும் இதுபோன்று யார் வெற்றி பெறுவார்கள் என அறிவித்தால் அது தேர்தலின் போது தாக்கத்தை கூட ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதால் தான் இது போன்று செய்ய மாட்டேன் என தெரிவித்தார்.
ஜாதகத்தை கணித்து அவரவரிடம் A-Z சொல்லலாம். எடப்பாடி பழனிசாமியோ, முதல்வர் ஸ்டாலினோ அவர்களின் ஜாதகத்தை அவர்கள் கொடுத்தால் கணித்து அவர்களிடம் சொல்லலாம். இதை மக்கள் மத்தியில் கொண்டு போகும்போது வேறு மாதிரி பார்ப்பார்கள். தனிப்பட்ட ஒரு கூட்டத்தின் அரசியல் முயற்சி இது, என்னை சிக்க வைத்துள்ளனர். அதனை வெகு விரைவில் ஆதாரத்தோடு வெளியிடுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தவறான செய்தி வெளியிட்ட செய்தி நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி வெற்றி பெறுவார் என ஜோதிடர் ஒருவர் தெரிவித்ததாக வெளியான செய்திக்கு அந்த ஜோதிடரே மறுப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications