செந்தில் பாலாஜியை தியாகி போல சித்தரிக்கிறார்கள்.. ஆளுநரை சந்தித்த பிறகு அதிமுக சிவி சண்முகம் ஆவேசம்
சென்னை: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை தியாகி போல சித்தரிப்பதாகவும் அவர் அமைச்சராக தொடர்வது சட்ட விரோதம் எனவும் அதிமுக நிர்வாகிகள் ஆளுநரை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினர்.
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில், அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, இன்று அதிமுக நிர்வாகிகள் குழு சந்தித்து மனு அளித்தது. அதிமுக மூத்த தலைவர்கள் சிவி சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்தனர்.

இந்த சந்திப்புக்கு பிறகு சிவி சண்முகம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கைது செய்யப்பட்ட உடன் செந்தில் பாலாஜியை நீக்குவதற்கு பதிலாக முதல்வரும் அமைச்சர்களும் கூட்டனி கட்சியினரும் தியாகியை போல சித்தரித்து கொண்டு இருக்கிறார்கள். செந்தில் பாலாஜி மீது அனுதாபத்தை ஏற்படுத்த முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.
அமைச்சராக இருந்து கொண்டு மக்களுக்கு நியாயமாக படித்து விட்டு வேலை வாய்ப்புக்காக இளைஞர்கள் காத்துக்கொண்டு இருக்கும் நிலையில், பணத்தை பெற்றுக்கொண்டு ஒரு வேலைக்கு 10 பேரிடம் பணத்தை பெற்று மோசடி செய்து இன்று கைதியாக இருக்கும் செந்தில் பாலாஜியை முதல்வர் பார்த்து இருக்கிறார். இது முற்றிலும் தவறான செயல். கைது செய்யப்பட்டு இருக்கும் அமைச்சருக்கு ஏன் முதல்வர் இந்த அளவிற்கு இறங்கி வந்து ஆதரவு கொடுக்கிறார்.
கனிமொழி கைதுக்கு கூட இந்த அளவுக்கு வருந்தாத, கஷ்டப்படாத முதல்வர் மு.க ஸ்டாலின் இப்போது ஓடோடி சென்று பார்க்கிறார். கனிமொழியை ஒருமுறை கூட முதல்வர் மு.க ஸ்டாலின் டெல்லியில் சென்று பார்த்ததாக தெரியவில்லை. அவர் அப்பா தான் (கருணாநிதி) போய் பார்த்தார். அப்படி தனிப்பட்ட சகோதரிக்கு கூட வருத்தப்படாத முதல்வர் மு.க ஸ்டாலின் இன்றைக்கு வருத்தப்படுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications