கூவத்தூரில் நடிகையுடன் எம்எல்ஏக்கள் உல்லாசம் என உளறல்! எதிர்ப்பால் பணிந்து மன்னிப்பு கேட்ட ஏவி ராஜு
சென்னை: கூவத்தூரில் நடிகைகளுடன் எம்.எல்.ஏக்கள் உல்லாசமாக இருந்ததாக அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜு பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அதற்கு மன்னிப்பு கோரி இருக்கிறார்.
அதிமுக சேலம் மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்தவர் ஏ.வி.ராஜு. இவர், சேலம் அதிமுக மாநகர மாவட்ட செயலாளராக இருந்து வரும் வெங்கடாசலம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாகவும், அளவுக்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதனை அடுத்து ஏ.வி.ராஜுவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி நடவடிக்கை எடுத்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஏவி ராஜு, தன்னை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது என்றும், எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியை நடத்த தெரியவில்லை எனவும் விமர்சித்தார். கூவத்தூரில் பணம் கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் என எடப்பாடி பழனிசாமியை சாடிய அவர், சட்ட திட்டங்கள் கூட தெரியாமல் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக இருப்பது வேதனை என்றார். மேலும் கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் பிரபல நடிகையுடன் என்ன செய்தார்கள் என்று தனக்கு தெரியும் என்று கூறி அவர், இதற்கெல்லாம் பணம் கொடுத்ததே எடப்பாடி பழனிசாமிதான் என்றும் குற்றம்சாட்டினார்
ஏவி ராஜுவின் இந்த பேச்சுக்கு திரைத்துறையினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது அவர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில், "சமூக வலைதளங்களில் என் மீது ஆதாரம் இல்லாத செய்தியை பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த செய்தியை நான் எந்த இடத்திலுமே சொல்லவில்லை. சம்பந்தப்பட்ட நபர் ஒருவர் சொன்னதாக அந்த செய்தியை சொன்னார். அவரது பெயரை மீண்டும் நான் சொல்ல விரும்பவில்லை. அது அருவருப்பாக இருக்கிறது. அந்த அம்மாவை பற்றி நான் எந்த இடத்திலுமே விமர்சனத்திற்கு கொண்டு வரவில்லை. நான் மற்ற இடத்தில் பேசும்போதுகூட இவர்களை பற்றி பேசவில்லை.
இவர்களுக்கு சம்பந்தமே இல்லை. எனக்கும் அவருக்கும் அரசியல் ரீதியாக காழ்புணர்ச்சி இருந்தது. எந்த இடத்திலும் திரைப்பட நடிகையையோ மற்ற யாரையோ நான் சொல்லவே இல்லை. இதை தவறாக சித்தரித்து காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அது எப்படி என்று எனக்கு தெரியவில்லை. திரைப்பட இயக்குநர் உயர்திரு சேரன் அவர்களுக்கும், ஆர்.கே.செல்வமணி அண்ணன் அவர்களுக்கும் என்னுடைய பணிவான வேண்டுகோள். ஒருவேளை உங்களுடைய மனம் புண்படும்படியாக நான் பேசி இருந்தால் சமூக வலைதளங்களின் மூலமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்." என்றார்.












Click it and Unblock the Notifications